Search This Blog

Tuesday, June 26, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (10): திரு. ராஜா பா. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (10): திரு. ராஜா பா. அவர்களின் இறை அனுபவங்கள்.


ராஜா பா (Raja P)
நேர்காணல் விவரம்:

இடம்: நாகை, திரு. ஆனந்த்/ராஜா அவர்களின் வசிப்பிடம்.
நாள்: வைகாசி 11, 2018 வெள்ளிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிடத்தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. திரு. ராஜா அவர்களுக்கு, தனது மூத்த சகோதரர் திரு. ஆனந்த மூலமாக சித்தர் அய்யா பிள்ளையின் அறிமுகம் கிடைத்து உள்ளது. சுமார், 2003-2004 வருடம் ஒரு பருவ வழிபாட்டில் கலந்துள்ளார், அதனால் ஈர்க்கப்பட்டு, அடுத்த பருவ வழிப்பாட்டில் அவர்தம் நண்பர்களுடன் கலந்துள்ளார். அந்த நிகழ்வில், சித்தர் அய்யா பிள்ளையுடன் பேச நேரிடுகின்றது. சித்தர் அவர்களும், அவர் நண்பர்களுக்கு சில செய்திகள் தெரிவித்துள்ளார். அதில் பள்ளிக்கூட நண்பர் ஒருவரிடம் அருள் நிலையில் ‘உனக்கு தான் எல்லாம் முடிஞ்சு போச்சில்ல, நீ ஏன் வந்து கேக்குற’ என்று கூறி அனுப்பியுள்ளார். அக்கணம் அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அடுத்த ஓராண்டில் அவர் காலமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வேறொரு நண்பர் தனது இரண்டு தங்கைகளின் திருமணத்தை பற்றி வினவ, சின்ன தங்கையின் திருமணம் முடிந்த பின்பே பெரியவளின் திருமணமும் முடியும் என்று சொல்லியுள்ளார், அதன்படியே சின்ன தங்கையின் திருமணமே முதலில் நடந்தேறியது. அந்த சந்திப்பில் சொல்லும் அளவிற்கு திரு. ராஜா அவர்களைப் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். 
  2. பிறகு திரு. ராஜா அவர்கள் சென்னைக்கு வேலைக்கு சென்று விடுகின்றார். அங்கிருந்து நண்பர் ஒருவருடன் திருவண்ணாமலை கிரிவலம் பயணம் சென்றுள்ளார். சாமி தரிசனம் காண இயலவில்லை, சரி கடைசியாக, குளத்தங்கரையில் கால் அலும்பிவிட்டு திரும்ப ஒரு முறை பார்க்கலாம் என்று நண்பர்கள் இருவரும் சென்றிருக்கின்றனர், அத்தருணத்தில், திரு. ராஜா அவர்கள், குளத்தில் தவறி விழுந்திருக்கின்றார், உடை,கைப்பேசி இவைகள் எல்லாம்  நனைந்து விடுகின்றது. அந்த சம்பவத்தில் கைப்பேசி பழுதாகிவிடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அவர் வீட்டுடன் பகிர்ந்துள்ளார், அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையை தொடர்பு கொண்டு வினவ, சித்தர் அவர்களும் தன்னை அழைத்து பேசுமாறு சொல்லியிருக்கின்றார். அதன்படி திரு. ராஜா அவர்களும் சித்தர் அவர்களை அழைக்கின்றார். அதுவே அவர் சித்தர் அவர்களுடன் முதல்முறை அலைபேசியில் பேசுவது. சித்தர் பேசிய முதல் சில வாக்கியங்கள் இது தான், ‘நீ யாரை கேட்டு திருவண்ணாமலை போன?’ திருவண்ணாமலைக்கு போனா எப்படி இருக்கனும், என்ன இருக்கனுமுனு தெரியுமா தெரியாதா உனக்கு? போய் கூத்தடிச்சிட்டு வந்தீங்கனா இதெல்லாம் நடக்காமலா இருக்கும்?, ஒழுங்கா பக்கத்துல இருக்க காளிகாம்பாள் கோவிலுக்கு போய் ஒரு வாரத்திற்கு விளக்கு போடு’ என்று உத்தரவிடுகின்றார். அதேபோல் இப்போதைக்கு திருவண்ணாமலை போக முயற்சி செய்ய வேண்டாம் என்றும், பிற்காலத்தில் வெளிப்பாடு ஆன பின் செல்லலாம் என்று கூறியுள்ளார். அவர் சென்னையில் பாடியில் வசித்து வருகின்றார், அங்கு எங்கு காளிகாம்பாள் கோவில் உள்ளது என்று அவரால் கண்டுபிடிக்க இயலாத நிலையில் அவர் வசித்து வந்த வீட்டு வளாகத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் வீட்டில் ஒரு தெய்வத்தை வைத்து வணங்கி வந்துள்ளார். சரி அவரிடம் கேட்போம் என்று எண்ணியவாறு இருக்க, ஓரிரு நாட்கள் கழிந்து விடுகின்றது. அன்று வேலை முடித்து திரு. ராஜா அவர்கள் வீடு திரும்பும் போது, அவர் வீட்டு வாசலில் எழுதியிருந்தது, காளிகாம்பாள் கோவில் இங்கு தான் உள்ளது என்று. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அய்யா சாதாரண மனிதர் அல்ல, அவரிடம் எதோ அபூர்வ சக்தி இருக்கின்றது என்பதை திரு. ராஜா அவர்கள் உணர ஆரம்பிக்கின்றார். 
  3. 2004 பக்கம், திரு. ராஜா அவர்களின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றார், காலையிலிருந்து நாகையில் ஒரு மருத்துவமனையில் பார்த்திருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, மாலையில், ஒரு கையும் ஒரு காலும் மெல்ல செயலிழக்க தொடங்கியது, பயம் ஆட்கொள்ள திரு. ராஜா அவர்களின் அண்ணன் திரு. ஆனந்த் அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையை அழைத்து வினவுகின்றார். வயலில் இருந்த சித்தர், உடனடியாக அவரை தஞ்சாவூர், வைத்தியர் வாஞ்சிலிங்கம் என்பவரிடம் அழைத்து செல்லுமாறு உத்தரவிடுகின்றார். மேலும் “எவ்வளவு சீக்கிரம் போய் பார்க்கிறாயோ அவ்வளவு சீக்கிரம் உங்க அப்பாவை காப்பாற்றலாம்” என்று உறுதி கூறுகின்றார். உடனடியாக இரவோடு இரவாக அடாத மழையில் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். சித்தர் சொன்னது இரண்டு விஷயம் தான், “தஞ்சாவூர்”, “வாஞ்சியலிங்கம் டாக்டர்”, முகவரி அலைபேசி எண் என்று எதுவும் தரவில்லை. விடியற்காலை மூன்று மணி அளவு தஞ்சாவூர் பெரிய பேரூந்து நிலையம் வந்தடைகின்றனர். இடம் தெரியாமல் வினவ, ஒரு டீ கடையில் விசாரிக்க சொல்கின்றனர் அங்கிருந்த மக்கள், அங்கு போய் இறங்க, எதிரிலேயே வாஞ்சியலிங்க டாக்டரின் மருத்துவமனை அமைந்திருக்கின்றது. அங்கு அழைத்து சென்ற பின் அவரது தந்தைக்கு உடல் நலம் முன்னேறி, ஒரே வாரத்தில் நலம் பெறுகின்றார். பின்னொரு காலத்தில் சித்தரிடம், எப்படி வாஞ்சியலிங்கம் டாக்டர் என்று தீர்க்கமாக சொன்னீர்கள் என்று வினவ, அவர் பதிலுக்கு, “வாஞ்சியலிங்க டாக்டரா, எங்கிருக்கான் டாக்டர்? எனக்கென்ன தெரியும், நான் என்ன டாக்டர் வீட்டுக்கு போனனா வந்தனா?” என்று கூறியுள்ளார். அவருக்கு அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததே தெரியவில்லை என்று கூறியிருக்கின்றார். அது வரை, திரு. ராஜா அவர்களின் குடும்பத்தில் அவரது அண்ணன் நாகை திரு. ஆனந்த் மட்டும் அய்யா அவர்களை சித்தர் என்று உறவு கொண்டாடி வந்திருக்கின்றார், இந்த நிகழ்வுக்கு பின், அவரது குடும்பமே அய்யாவை சித்தர் என்று ஏற்றுக் கொண்டு உறவு பாராட்டி பழகி வந்தனர். 
  4. அவருடன் வெளியூர் பயணம் என்று பார்க்கும் போது, கடை நிலையில், திருப்பதி பயணம் முடித்து விட்டு அய்யா சில அன்பர்களுடன் அருப்புக்கோட்டை பயணிக்கின்றார். அங்கு அருப்புக்கோட்டையில் தன்னை வந்து சந்திக்குமாறு, திரு, ஆனந்த் அவர்களை அழைக்கின்றார், அவருடன் திரு. ராஜா அவர்களும் கிளம்புகின்றார். அங்கு சென்றவுடன், திரு. ராஜா அவர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டில் கேட்கின்றார், அவரும் அது வாங்கி வருவதற்குள் அடுத்த பேரூந்தில் ஏறி அமர்ந்து விடுகின்றனர். இதனிடையே திரு. ராஜா அவர்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது, நேரமில்லாத காரணத்தால் சிறுநீர் கழிக்காமலேயே பேரூந்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றார். திருவாரூரில் பேருந்து நிற்கும் போது கழித்து விடலாம் என்ற எண்ணி அமர்ந்திருக்கின்றார், நீடாமங்கலம், கொரடாச்சேரி, தாண்டிய பின், திரு. ராஜா அவர்களால் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு உந்தப்படுகின்றார். ஓட்டுனரிடம் சென்று கேட்க கூச்சப்பட்டு, மூத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க, இரயில்வே கேட்டிலும் நிற்காமல் வண்டி செல்கின்றது. சரி வேறு வழியில்லை, பின் இருக்கையில் அய்யா அமர்ந்திருந்தும், அவரிடம் நேரடியாக கேட்க மனமின்றி கண்கள் மூடி பிரார்த்தனை செய்கின்றார். அடுத்த பத்து நிமிடங்களில் திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் வண்டி நிற்கின்றது. ஓட்டுனர் கிழ் இறங்கி செல்ல, திரு. ராஜா அவர்களும் அவரை பின் தொடர்கின்றார். கீழ் சென்று பார்க்க, ஓட்டுனர் வண்டி சக்கரங்களை தட்டிப்பார்த்து கொண்டிருக்கின்றார், அவர் சிறுநீர் கழிக்க பேரூந்தை நிறுத்தவில்லை என்பதை அறிந்து கொண்டு, திரு. ராஜா அவர்கள் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு சிறுநீர் கழிக்கு செல்கின்றார். அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்த ஓட்டுனர், திரு. ராஜா திரும்பி பார்க்கும் போது, “தம்பி போகலாமா” என்று கேட்டு இருக்கின்றார். இது அவரது அய்யாவுடனான முதல் பயணத்தில் கிடைத்த நல்லதொரு அனுபவம். 
  5. இதன் பின் அருப்புக்கோட்டையில், காலை முழுவது ஏடு பார்த்து விட்டு அங்கு நேரம் கழித்திருக்கின்றனர். சுமார், இரவு எட்டு மணி அளவில், அனைவரும் கிளம்பிய பின், அய்யாவுடன் வந்தவர்கள் மட்டும் இருக்க, பிள்ளையார் கோவில் என்று நினைக்கின்றார், கோவில் பணிகள் முடிக்கப்படாத நிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்யும் மூன், கருவறையில் அமர்ந்து பாடுமாறு அய்யாவை பணிக்கின்றனர். அவரும் அதற்கு இசைந்து வாசலில் அமர்ந்து பாடச் செல்ல, அவரை கருவறையில், பிரதிஷ்டை செய்யும் இடத்தில் அமர்ந்து பாடுங்கள் என்று விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் விருப்ப படியே கருவறையில் அமர்ந்து அவர் பாடுகின்றார். இரு அன்பர்கள் உள்ளும், இவர்கள் வெளியேவும் அமர்கின்றனர். அங்கு அமர்ந்து அய்யா சிவ புராணம் பாட, அமர்ந்திருந்த அனைவருக்கும் யோக நிலை வசப்படுகின்றது. அனைவரும் யோக நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதெல்லாம் முடிந்த பின் பேருந்தில் வரும்போது, அய்யா அவர்கள் திரு. ராஜாவிடம் அவர் நிலை மாறியதைப் பற்றியும் அதற்கான காரணத்தை பற்றியும் வினவுகின்றார். அந்த நிலை ஆரம்பிக்கும் முன் முதலில் அதிர்வுகளை உணர்ந்திருக்கின்றார், பிறகு மெல்ல உடல் ஆட்டம் கொள்ள, உடல் பின் சாய்ந்திருக்கின்றது, அதற்கு பின், அந்த பாடல் முடிந்த பின்னரே, மெல்ல வெளி உலகத்தினை உணர ஆரம்பித்திருக்கின்றார், அது வரை மெய் மறந்த நிலையில் இருந்ததை உணர்கின்றார். உட்கார்ந்தவாக்கில் பின் விழுந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அன்று அவருக்கு வாசி எழுப்பப்பட்டிருக்கின்றது என்று சொல்லலாம். இதுவே, திரு. ராஜா அவர்களின் முதல் ஆத்ம அனுபவமாகும். பாடல் பாடும் போது, கீழ் விழுந்த போதும் உணர்வு நிலையில் இருந்திருக்கின்றார், பின்னர் தான் மெய் மறந்திருக்கின்றது, பாடல்கள் முடிந்ததை உணரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
  6. ஒரு நாள் இரவு பால்குடம் முடிந்த பிறகு, சுமார் பத்து வருடங்களுக்கு பிறகே, சித்தர் அய்யா பிள்ளை திரு. ராஜாவிடம் வினவுகின்றார். எத்தனை வருடங்களாக என்னை பார்க்க வருகின்றாய்? எதற்காக என்னை பார்க்க வருகின்றாய்? என்று கேட்கின்றார். அதற்கு திரு. ராஜா அவர்களும் அண்ணன் வர ஆரம்பத்திலிருந்து சுமார் பத்து வருடங்களாக அவரை தெரியும் என்றும், தன் தந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த நாள் முதல் அவரை சராசரி மனிதர்களை விட பெரியவராகவும் கருதி வருகின்றார் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் எதுவும் கற்பதற்காக வரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கின்றார். பின்னரே சித்தர், நீ வேஷ்டி கட்டி இருக்கின்றாயா என்று வினவ, அதற்கு திரு. ராஜாவும் இல்லையென்று சொல்லியிருக்கின்றார். அருகில் இருந்த ஒருவரிடம் பச்சை வேஷ்டியை வாங்கி கட்டிக்கொள் என்று சித்தர் சொல்ல, அவரும் அந்த வேஷ்டியை, தனது கால்சட்டையின் மேலாகவே அப்படியே கட்டிக்கொள்கின்றார். அந்நிலையில், விட்டு வாசல் அருகே தலை ஒருவர் மேலும், கை கால்களை நாலு பேரு தனித்தனியாக பிடித்துவிட்டவாறு இருக்க, சித்தர் படுத்துக் கொண்டு இருக்கின்றார். திரு. ராஜாவை தனது தொப்புள் மேல் கை வைக்க சொல்கின்றார். பின்னர் கண்களை மூடி என்ன செய்கின்றது என்று கவனிக்க சொல்லியிருக்கின்றார். அவரும் அப்படி செய்ய, சித்தர் உடம்பில் இருந்து ஜீவ காந்த சக்தி தன் உடம்புக்குள் ஏறுவதை நன்கு உணர்ந்திருக்கின்றார். அக்கணம் சித்தர் என்ன செய்கின்றது என்று வினவ, திரு. ராஜாவும் அது, தன்னை, தனது உடம்பை, என்னவோ செய்கின்றது எனவும். தலையை பிடித்து இழுக்கின்றது எனவும் கூறுகின்றார். அதற்கு சித்தரும் சரி அப்படியே இரு அது என்ன செய்கின்றது என்று கவனிக்க சொல்லியிருக்கின்றார். திரும்பவும் சித்தர் வினவ, திரு. ராஜா அவர்கள் தனது கைகள் மறுத்துபோவதையும், கழுத்தை பிடித்து அது இழுப்பதையும் பகிர்ந்திருக்கின்றார். இது தான் ஜீவ காந்த சக்தி, மற்றும் அதன் செய்லபாடு என்று சித்தர் விளக்கி இருக்கின்றார். அருகில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவம் அன்று கிடைத்தது என்பதையும் இங்கு தெரியப்படுத்திக் கொள்கின்றார். 
  7. தொலைக்காட்சியில் சித்தர்களைப் பற்றி வரும் நிகழ்ச்சிகளை பற்றி திரு. ராஜா அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையிடம் வினவுகின்றார். அதன் உண்மையை உணர விரும்பியுள்ளார், அதற்கு சித்தரும் அவை உனக்கு தொடர்புடைய விஷயங்கள் என்பதால் உனக்கு அது மனதில் ஆழமாக தங்கி விடுகின்றது என்று கூறியுள்ளார். பின் ஒரு நாள் அதைப்பற்றி பேசுவோம் என்று கூறி விடுகின்றார். 
  8. சென்னையில் இருந்து வேலையை விட்டு ஊரில் சிறிது காலம் தங்கியிருக்கின்றார், அப்பொழுது சித்தர் அய்யா பிள்ளையை சந்தித்து வேலை இல்லை என்று சொல்ல, அதற்கு சித்தர், நீ தான் உன் மேல் அதிகாரியை அடிக்க போய்விட்டாயே, பிறகு இரவு வேலையை முடித்த பின் டிரில்லிங் மிஷின் கீழே படுத்து தூங்கி விடுகின்றாயே பிறகு எப்படி உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகின்றார். மேல் அதிகாரி உன்னை விட குறைவாக படித்திருந்தாலும் மரியாதை தந்து தான் ஆக வேண்டும் என்று போதனை அருளியுள்ளார். 
  9. பிரான் மலை தர்கா சென்று வருமாறு சித்தர் உத்தரவிட அவர்களும் அங்கு சென்று வருகின்றனர். ராதாமங்கலத்தில் என்ன நிலை கிடைக்குமோ அந்த ஆத்ம நிலை அங்கும் கிடைத்தது என்பதையும்  தெரியப்படுத்தியுள்ளார். 
  10. வெளிநாட்டு வேலைக்கு செல்லலாமா என்று சித்தரிடம் வினவ அவரும் முயற்சி செய்யுங்கள் என்று கூறுகின்றார். அதில் சில தோல்விகள் அடைந்திருக்கின்றார், அத்தருணங்களில் அய்யா நிறைய உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இடத்தில் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க இரண்டு வருடம் ஆகியது என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு முறை செல்லும் போதும் பொறுமையாக செல், பத்த நாட்கள் கழித்து போ, இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து போய் பாரு, என்று வழி நடத்தியுள்ளார். அவர்களும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். பணம் தரும் முன் சித்தரிடம் கேட்டு தான் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நிலையில் எங்கு ஏமாந்து விட்டோமோ என்று அய்யாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். பொறுமையிழந்த நிலையில் அவர்கள் மேலும் மேலும் முறையிட, சித்தரும் நேரில் போய் பார்த்து விட்டு வருமாறு கூறுகின்றார். அவர்கள் சென்று அங்கு கொஞ்சம் வேகமாக பேசிவிட்டு வருகின்றனர். திரும்பவும் கொஞ்ச நாட்கள் கழித்து செல்கின்றனர், அப்பொழுது பணம் வாங்கியவர்கள், நீங்கள் போன முறை வந்து போன பிறகு என் பெண்ணுக்கு, மகனுக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, இன்னும் சில அசுப நிகழ்வுகள் நடந்தன தயவுசெய்து எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் செய்து விடாதீர்கள், உங்கள் பணத்தை திரும்ப தந்து விடுகின்றோம், என்று கையெடுத்து கும்பிட்டு மன்றாடி இருக்கின்றனர். இதற்கு தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு வந்திருக்கின்றனர். அடுத்த ஒரு வாரத்தில், பணம் வாங்கியவர் வீட்டில் கேஸ் கூக்கர் வெடித்து பெண்கள் பாதிக்க படுகின்றனர். இதனை திரு. ராஜா அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையிடம் பணம் வாங்கியவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்று முறையிட, அய்யாவும் “பாத்துகலுமடா, கஷ்டப்படுறாங்கனா கஷ்டப்படட்டும்” என்று கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து அசம்பாவிதம் நடக்க பணம் வாங்கியவர்கள், என்ன ஏது என்று தெரியவில்லை, உங்களிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கு, அதனால் தான் கடைசி நேரத்தில் இவ்வளவு பாதிப்பு அடைந்து விட்டோம், நீங்கள் ஏதாவது செய்திருந்தாலோ இல்லை யாரிடமாவது தகடு செய்து வைத்திருந்தாலோ தயவு செய்து எங்களுக்காக எடுத்து விடுங்கள். இதற்கு மேல் எங்களால் தாங்க முடியாது என்று சொல்லி பெற்ற காசையும்* திரும்ப கொடுத்து விடுகின்றனர். 
  11. பிறகு சென்னையில் சிறிது காலம் வேலை செய்து வர, மறுபடியும்  வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. அதேபோல் சித்தர் அய்யா பிள்ளையிடம் உத்தரவு கேட்டு காசை தருகின்றனர். முதல் முறை தோல்வி. இரண்டாம் முறை வெற்றி. அய்யா சமாதி அடைந்த பின் வெளிநாடு சென்று வேலை செய்ய ஆரம்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* அசலுக்கு வட்டி ஏதும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.