Search This Blog

Sunday, July 29, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (15): திரு. மணிசாமி. பெ அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (15): திரு. மணிசாமி. பெ அவர்களின் இறை அனுபவங்கள்.

மணிசாமி. பெ. (Manisamy)
நேர்காணல் விவரம்:

இடம்: மதுரை, திரு. மணிசாமி. பெ அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 13, 2018 ஞாயிற்றுக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. 37 வருட சதுரகிரி பயணமும். 37 வருட சபரி மலை பயணமும் மேற்கொண்ட இவர், முதல் முறை சித்தர் அய்யா பிள்ளையை சந்தித்தது சதுரகிரி மலையில், ஒரு அமாவாசை இரவு, சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி சன்னிதியில், சுவாமி அபிஷேகத்தின் போது. தேவாரம், திருவாசகம் முழங்க, சுவாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டு இருக்க, நூறு—நூற்றி ஐம்பது பேர் சுற்றி வழிபாடு செய்ய, சித்தரின் உடம்பில் இருந்து ஒரு ஒளி பயணித்து சென்று லிங்கத்தை மோதியிருக்கின்றது. பூசாரி யாரையும் படம் பிடிக்க கூடாது என்று சொல்லி விட்டு திரும்ப, இரண்டாவது முறையாக ஒரு ஒளி சித்தரின் உடம்பில் இருந்து பயணித்து சென்று லிங்கத்தை தடவுகின்றது, இந்த முறையும் பூசாரி சந்தேகித்து சோதிக்க, யாரும் படம் எடுக்க வில்லை என்று தெரிய வருகின்றது. பிறகு, வழிபாடு தொடர, சித்தரின் உடம்பில் இருந்து சென்ற ஒளி லிங்கத்தை ஆர தழுவி இருக்கின்றது. இந்த நிகழ்வை கண்ட திரு. மணிசாமி, யாரோ பெரியவர் வந்திருக்கின்றார் என்று எண்ணிக் கொண்டு, அன்று இரவு கூட்ட நெரிசலில் பேச இயலாமல் விலகி சென்று இருக்கின்றார். இந்த நிகழ்வின் போது அய்யாவுடன் இருந்தவர்கள், சித்தரை சதுரகிரி அழைத்து வந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சாப்டூர் ஜமீன். திரு. மணிசாமியுடன் திருவாசகம் தேவாரம் பாடகர்களும் ஒரு அம்மையாரும் உடன் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. அடுத்த நாள் காலை பிலாவடி கருப்புசாமி கோவில் அருகே வழக்கமாக குளிக்கும் யானை பள்ளம் அருகில், திரு. மணிசாமி குளித்துக் கொண்டு இருக்க, சித்தர் அவரை நோக்கி வருகின்றார். திரு. மணிசாமி, அவர்களை ‘சாமி’ என்று வணங்க, சித்தர் “நீ யாருப்பா?” என்று வினவி இருக்கின்றார். திரு. மணிசாமி அவர்களும், தான் மதுரையில் இருந்து வருவதாக சொல்ல, சித்தர் உடனே, “டேய், உன்னதாண்ட பாக்கனுமுனு இருந்தேன்” என்று சொல்லி இருக்கின்றார். அறிமுகமே இல்லாமல் தன்னை இப்படி உரிமையுடன் அழைத்தை புன்முறுவலுடன் பகிர்ந்து கொண்டார். சித்தர் அவரை அடிவாரத்தில் இருந்து தான் பூசைகள் செய்வதை கவனித்து வந்ததாகவும், அவரை சந்திக்கும் படி சொல்லியதாகவும், இப்பொழுது சந்தித்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த தொடர்பிற்கு பிறகு, அவருடன் பல யாத்திரா பயணங்கள் சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  3. இப்படி யாத்திரா பயணங்களில் இரவு ஒன்று, இரண்டு, மணிக்கு பார்க்கும் போது, ஆதிசேஷன் மேல் படுத்திருப்பது போல் இருக்கும் என்றும், சிறிது நேரம் கழித்து பார்த்தால் திரும்பவும் மனித உருவத்தில் இருப்பார் என்று வியக்கின்றார். இந்த மாதிரி பல நிகழ்வுகள் அவருடன் அனுபவித்தாக பகிர்ந்து கொள்கின்றார்.
  4. ஸ்ரீசைலத்தில் இருவரும் லிங்கத்தை பிடித்து வழிபடும் போது, ஒரு ஜோதி லிங்கத்தை மோதி விட்டு சென்றதாக சாட்சி கூறியுள்ளார்.
  5. துங்கபத்திரா ஆற்றங்கரையில், காளி சன்னிதியில் அமர்ந்திருக்கும் போது, சித்தர் நாக்கில் கற்பூரம் ஏற்றுமாறு உத்தரவிட, திரு. மணிசாமி அவர்களும், நாக்கில் கற்பூரம் ஏற்றுகின்றார், அப்பொழுது அந்த ஒளி, கோவில் கற்பக்கிரகத்தினுள் சென்று காளி மேல் அடித்தாகவும், அந்த நிகழ்வு அவருக்கும் நடுக்கத்தை கொடுத்தாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  6. நந்தியால், உமாமகேஸ்வர மலை பயணம் முடித்து, இரவு நேரம், காலை உண்ட உணவோடு, பசியில், ஒரு கடையின் அருகில் இருந்திருக்கின்றார். அங்கு சித்தர் அரங்கேற்றிய சில ஆத்ம வெளிப்பாடுகளை பார்த்து, அந்த கடைக்காரர் சித்தரின் காலில் விழுந்திருக்கின்றார். தன் மனைவிக்கு திருமணமான காலத்திற்கு முன் இருந்து ஆவி பிடித்திருக்கின்றது என்றும், அது அவளை உருக்கி எடுத்துவிட்டது என்றும், குணப்படுத்துமாறு மன்றாடி இருக்கின்றார். சரி என்று அவரும் ஏற்றுக்கொண்டு, சித்தருக்கு தெலுங்கு மொழி தெரியவில்லை எனினும், அருகில் இருந்த அன்பர் ஒருவரின் உதவியோடு, ஆவியிடம் பேச ஆரம்பித்திருக்கின்றார். அதுவும் தலை விரி கோலத்தில் பேசி இருக்கின்றது. அது கேட்டது, ஒரு படி கைகுத்தல் அரிசி, ஒரு சேவல், இரண்டு கிலோ இருக்கும், இரண்டு லிட்டர் ஈச்சங் கல்லு, மற்றும் கண்ணாடி சில இதர பொருட்கள். அதனை செய்து கொடுத்ததும் இரண்டு கிலோ சேவலை கடித்து தின்று, ஒரு படி அரிசியையும் உண்டு, இரண்டு லிட்டர் கல்லையும் குடித்து விடுகின்றது. உடலை குலுக்கி விட்டு, வாக்கு கொடுத்தன் பெயரில், அந்த ஆவி விலகிக் கொண்டது. அதன் பின் முடியை அறுத்து, பனை மரத்தில் வைத்து ஆணி அடித்து விட்டு வருகின்றனர். குணமான பெண்ணோ, உடனடியாக எழுந்து, வந்தவர்களுக்கு சமையல் செய்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உணவு பரிமாறுகின்றார்.
  7. இந்த சம்பவத்தின் பிறகு, சுமார் 7அடி உயரம் உள்ள சித்தர் ஒருவர், தும்பை பூ நிறத்தில் பளிச்சென ஒளி பொருந்திய வெள்ளை நிற ஆடையுடன், தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் பாலத்தின் மேல் வந்து அமருகின்றார். இரவு முழுவதும், “சிவ ஹோம்”, “சிவ ஹோம்”, என்று சொல்லி பாடிக்கொண்டே, “ஒருத்தன் இங்கிருந்து வந்திருக்கான், ஒருத்தன் காளி அவதாரம் எடுத்து வந்திருக்கான், ஒருத்தன் சிற்பியா வந்திருக்கான்…” என்று அங்கு கூடியிருந்தவர்களை பற்றி சொல்லுகின்றார். ஒரு சித்தன் வந்திருக்கான், அவன் காளி அவதாரம் பிடிச்சவன், இங்க இந்தந்த விஷயங்கள் செஞ்சிருக்கான், இவன் இந்த அவதாரம் பிடிச்சு வந்திருக்கான் என்று, முன்பின் அறியாத அவர்களை பற்றி சொல்லுகின்றார். “சிவஹோம், நமசிவாய, சிவஹோம்…” என்று இரவும் முழுவது சொல்லிக் கொண்டே இருந்திருக்கின்றார். சரியாக பிரம்ம முகூர்த்தம் ஆரம்பிக்க அவர் எங்கு போனார், எங்கு மறைந்தார் என்றே தெரியவில்லை. அவர் மேல் இருந்த ஒளி கூடி இருந்தவர்கள் கண்ணை பரிக்க, அய்யா, யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடுகின்றார். அவர்களும் உள்ளிருந்தவாறு அந்த நிகழ்வை அனுபவித்திருக்கின்றனர்.
  8. தனுஷ்கோடியில் ஒரு வழிபாடு செய்யும் போது, சித்தர் தண்ணீருக்குள் கால் மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு இருந்திருக்கின்றார். அனைவரும் ஆனந்தமாய் நீராடிக் கொண்டிருக்க, அதனை கவனிக்காமல் போய் விடுகின்றனர். பதறிப் போய், திரு. மணிசாமி சித்தரை தேட, அவர் நீரினுள் அமர்ந்திருப்பதை காண்கின்றார். அவர் நீரினுள் இட்ட பத்மாசனத்தை பிரிக்க இயலாமல், போராடி, பிரித்து, அவரை நீரை விட்டு பெரும் பாடுபட்டு வெளியே கொண்டு வருகின்றனர். ஒரு சமயம் அமர்ந்தவாறே மறைந்து திருவிளையாடல் நிகழ்த்தி இருக்கின்றார். இப்படி சுமார் இருபத்தி அய்ந்து வருடங்கள் சித்தருடன் பின்னிப்பிணைந்து, பல யாத்திரா பயணங்கள் உடன் சென்று, பல நல்ல, அபூர்வமான இறை அனுபவங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றார். சுமார் 1985ல் இருந்து சித்தருடன் நெருங்கி பழகி இருக்கின்றார்.
  9. திரு. மணிசாமி அவர்கள், இதனை பதிவு செய்த காலம் முதல் இருபத்தி ஓர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்த குறிப்பில் சொல்ல காரணம், அந்த கர்வம் துளியும் இன்றி சித்தரிடம் பெற்று தனது இறை அனுபவங்களை, அவரின் பால் மிக்க பணிவுடன் பகிர்ந்து கொண்டதே! பல பெரிய மனிதர்கள் வளர்ந்த பின்னும் குருவிடம் பணிந்து இருப்பதும் இன்றைய காலகட்டத்தில் இறை அனுபவங்களுக்கு ஒத்த அதிசயமாக காண்கின்றேன்.
  10. ஆரம்ப காலத்தில் ஒரு பெளர்ணமி இரவு, தாள விருச்சத்தில், அம்பாளுக்கு பொங்கல் வைக்கின்றனர். ஓலை அனைத்தும் அம்பாள் வடிவமாய், ஜோதிர்மயமாய் தெரிய, அதற்கு நேர் மேலே, வானத்திலும் ஜோதி பிரகாசித்துக் கொண்டு இருந்திருக்கின்றது. இதனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், அன்பர் ஒருவர் பார்த்திருக்கின்றார்—தாள விருச்சத்திற்கு மேல், வானத்தில் அனாதியாய் ஜோதி பிரகாசித்து கொண்டு இருப்பதை. இந்த ஜோதி தரிசனத்தை அன்பர் ஒருவர் தூரத்தில் பார்த்து கொண்டு இருக்க, இங்கு, தாள விருச்சத்திற்கு கீழ் சித்தர் கண்கள் மூடி படுத்துக் கொண்டு இருக்கின்றார், அவர் வந்தவுடன், அங்கிருந்தே ஜோதி தரிசனம் கண்டாயா என்று வினவி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கின்றார்.
  11. பாப் அய்யா சித்தர் கோவிலில் நாக பிரதிஷ்டை செய்த போது, பட்டப்பகலில் பன்னிரெண்டு மணிக்கு விண்ணில் ஜோதி உருவாகி இருக்கின்றது.
  12. அய்யா அவர்களின் முதல் மனைவி மற்றும் மாமியார் இருவரும் ஒரே நாள் காலமான போதும், அவரது கண்ணில் ஒரு துளி தண்ணீர் வரவில்லை, மாறாக, எப்பொழுதும் போல ஆனந்தமாய், ஆன்மீகத்தைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்திருக்கின்றார். இவ்வாறு எந்நிலையிலும் பற்றற்று தனது கடமையை மிகவும் நெருடலான சூழ்நிலைகளிலும் முழுமையாக பற்றற்று செய்து வந்திருக்கின்றார்.
  13. ஒரு சதுரகிரி பயணத்தின் போது, வனத்திற்குள் போக வேண்டும் என்று சொல்லி, பெரிய மகாலிங்கம் செல்கின்றனர், பின்னர் அங்கிருந்து, தவசி பாறை சித்தர் காலங்கிநாதர் குகைக்கு செல்கின்றனர். அங்கும் அன்று இரவு யாகம் நடத்திக் கொண்டு இருந்த போது, ஒரு பெரிய ஜோதி, மலையே மின்னும் அளவிற்கு பெரிய மகாலிங்கம் சன்னிதியிலிருந்து கிளம்பி மறைந்ததை கண்டுள்ளுனர். இந்த தேடலின் நிமித்தும் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் கோர பசியில் இருந்திருக்கின்றனர். இப்படி சாப்பாடு நீர் இன்றி தேடியவர்களும் உண்டு. இப்படி பசியில் துவண்டு போய் கிடந்தவர்களுகு, சுமார் காலை 5.30 மணியளவில், வனத்தில், மலையின் உச்சியில், சுட சுட இட்லி, வடை, பொங்கலுடன் மூன்று நபர்கள் வந்து உணவு தந்து விட்டு செல்கின்றனர். அதுவும் சுட சுட, அனைவருக்கும் போதும் என்ற அளவிற்கு கொடுத்து அருளுகின்றனர். தங்களுக்கு நீரும், ஆகாரமும், சாதாரண மனிதர்கள் போல வந்து பசியாற தந்து விட்டு சென்றவர்களை பத்தடி தாண்டி பார்க்க இயலவில்லை. வந்த வழியே மறைந்திருக்கின்றார்கள். ஒரு நாள் பட்டினிக்கு பிறகு தேவாமிர்தம் என்று சொல்லலாம்!
  14. மாவூத்திலிருந்து, பெருமாள் மண்டைக்கு, சென்றவர்கள், திரும்ப மகாலிங்கத்திற்கு வர வழி தெரியாமல் அடர்ந்த வனத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள், இரண்டு நாட்கள் பக்கம் சாப்பாடு இல்லாமல் மிகவும் தொய்வுற்று இருந்திருக்கின்றனர். மழை பெய்ய ஆரம்பித்து விடுகின்றது. சித்தர் அய்யா பிள்ளை அவர்களுக்கு வயிற்று போக்கால் அவதி பட, நீர் இல்லாமல் இருக்க, வேட்டியை கிழித்து தனது ஆசன வாயிலை சுத்தம் செய்திருக்கின்றார். இருட்ட ஆரம்பிக்க, எங்கு பார்த்தாலும் புலி சப்தமும், யானை சப்தமும் கேட்கின்றதே, இதில் எங்கிருந்த நாம் தப்பிக்க போகின்றோம் என்று திரு. மணிசாமியிடம் தனது அய்யத்தை தெரியப்படுத்திருக்கின்றார். அவர்கள் மாட்டிக் கொண்ட இடத்தை யமனின் காவு என்று விவரிக்கின்றார் திரு. மணிசாமி. இதனிடையில்  அவர்களை அழைத்து வந்த ‘மருந்து சாமி’, என்பவர் உடலில் நடுக்கம் அதிகமாகி விடுகின்றது. குளிர்ந்து காற்று. மழை. வனம். இருட்டு. மிருகங்கள் சப்தம், என உயிரை பிடித்து சென்ற தேடல் பயணமாகி விட்டது. பெரும் பள்ளங்கள் ஏறி இறங்க, களைப்பு போட்டி வாட்டி எடுக்க, புதர் மேல் கால் வைத்தால் அது தொடை வரை சொல்ல, என கடுமையான பயணமாகி விடுகின்றது. ஒரு வழியாக, திரு. மணிசாமி அவர்கள், யாரோ அப்பொழுதிட்ட மனித மலத்தை கண்டு, ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்கின்றார். சப்தம் எழுப்பியவாறு தேடி செல்கின்றார். ஒரு மலைவாசி அவர் சப்தத்தை கேட்டு குசுகுசுப்ப, ஒரு வழியாக அந்த அடர்ந்த வனத்தில், இரவில், தங்க வைக்க, வழிகாட்ட, ஒரு ஆள் கிடைக்கின்றது. அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை குசுகுசுப்பாக பேச, எப்படியோ புரியவைத்து, ஒரு குகையின் இடுக்கில் ஓய்வெடுக்க, கொஞ்சம் இடம் பெற்றுக் கொள்கின்றனர். கடுமையான பசி, ‘உணவு’ என்று கையேந்த, அந்த மலைவாசியும், கொட்டும் மழையில், நெருப்பு பத்த வைக்க இயலாத சூழ்நிலையிலும் நெருப்பை மூட்டி, காட்டு மிளகாய் கிள்ளிப்போட்டு ஆளுக்கு ஒரு சோற்று உருண்டை தந்து உயிரை காப்பாற்றி விடுகின்றார். அவர்களும் அதனை உண்டு, காலை நன்றாக நீட்டி படுக்க கூட இயலாத நிலையில், மழை நீர் மேலெல்லாம் ஒழுக, கடும் நடுக்கம் தரும் குளிரில், ஆட்டு மூத்திரம் மேல் பட ஒடுங்கி படுத்திருக்கின்றனர். மூத்திரம் வந்தால் கூட எழுந்து நிற்க இயலாத நிலை, அப்படியே போய் கொள்ள வேண்டிய அளவிற்கு சன்னமான இடுக்கு அது. சித்தருக்கு கொஞ்சம் மேலாக படுக்க இடம் கிடைத்திருக்கின்றது. அந்த மலைவாசி குடும்பம் குகையினுள் படுத்துக் கொண்டது. அவர்களிடம் இரண்டு ஆடு, ஒரு நாய் அந்த குகையில் இருந்தது. காலை அவர்களே அழைத்து வந்த சந்தன மகாலிங்க சன்னிதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தை சித்தர் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் போது, இரண்டு முக்கியமான சம்பவங்களை சொன்னார். ஒன்று, அவர்களுக்கு உணவு சமைக்கும் போது, சூடான கஞ்சியை கரண்டியை விட்டு கிண்டாமல், கையை விட்டு கிளறினார் என்றும், அந்த கஞ்சியின் சுவை அற்புதமாக இருந்தது என்றும், இது வரை அப்படியொரு சுவையை அவர் அனுபவித்தில்லை என்றும் கூறினார். இரண்டாவதாக, இளம் வயது சித்தர் ஒருவர் (குரு நாதர்) தோன்றி, இந்த அடர்ந்த வனத்தில், ஒரு விஷ ஜந்து, வன விலங்கு உங்கள் பாதையில் வராமல் இது வரை அழைத்து வந்தது நான் தான் என்று கூறி அவர்கள் இருப்பதை வெளிப்படுத்தி கொள்வது.
  15. இது நந்தியாலில், கருடா நந்திக்கு, வனத்தின் வழியாக சென்ற பயணம். சித்தர் அய்யா பிள்ளையும், திரு. மணிசாமி, இருவர் மட்டுமே செல்லுகின்றார்கள். சுடும் வெயிலில், பாதங்கள் கொப்பளித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தம் சொட்ட சொட்ட செல்ல, அங்கு செல்லும் வழியில், மூங்கில் வெட்டுபவர்கள், சோற்றை வடித்து காடா துணியில் கட்டி வந்து, ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து உண்ண ஆரம்பிக்கின்றார்கள். ஒவ்வொருவரும், ஒரு படி சோற்றை உண்டு கொண்டிருந்தனர். அந்த அளவு உழைப்பு. அந்த அளவு பசி. இவர்களை உணவு அருந்த அழைத்த போது, சித்தர் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றார். அந்த அசதியிலும், களைப்பிலும், இலக்கு ஒன்றே குறியாக இருந்திருக்கின்றது. அதற்கு பின் அங்கிருந்து ஸ்ரீ சைலம் செல்கின்றனர். இப்படி தேடல்கள் படு தீவரமாக இருந்திருக்கின்றது.
  16. கஞ்ச மலையில், இரவு மலை உச்சியில் தங்க நேரிடுகின்றது. நள்ளிரவு நேரம் அனைவரும் குளிரில் நடுங்கி கொண்டு இருக்க, சித்தர் ஒருவர் வெள்ளை வேட்டியில் வந்து, அருகில் இருந்த செடி கொடிகளை உடைத்து நெருப்பூட்டி, சில செய்துகளை சொல்லிவிட்டு, அப்படியே மறைந்திருக்கின்றார்.
  17. 2004 பக்கம் காசி செல்கின்றனர், ஹரிசந்திர மயானத்திற்கு செல்ல சொல்லி மூவரை தேர்ந்தெடுக்கின்றார் சித்தர் அய்யா பிள்ளை. அதில் திரு, மணிசாமி ஒருவர். சித்தர் சொன்ன விதம், திரு. மணிசாமி வழிகாட்ட, ஆயிரம் பேர் போக, ஆயிரம் பேர் வர, அங்கு தியானம் செய்ய சென்றவர்களை நோக்கி, கங்கை ஆற்றங்கரை பக்கமாக ஒருவர் நடந்து வருகின்றார், வெள்ளை வேட்டி வெள்ளை துண்டுவுடன். கையில் சுருக்குப் பை போல ஒரு முடியில் எதனையோ கட்டிக்கொண்டு, அவர்களை நோக்கி, வானத்தை பார்த்து சிரித்தவாறே வந்திருக்கின்றார். முடியை அவர் நீட்ட, திரு. மணிசாமி அவர்களும் அதனை பெற்று கொள்ள முன் வருகின்றார். அதனை வாங்க விடாமல் கூட இருந்தவர்கள் தட்டி விடுகின்றார்கள். அவரும் அதே போல் சிரித்துக் கொண்டே வந்த வழி திரும்ப செல்கின்றார், நாலடி தாண்டி காற்றுடன் காற்றாக மறைந்து விடுகின்றார். இந்த நிகழ்வு இங்கு ஹரி சந்திர மயானத்தில் நடக்க, அப்பொழுது குமரகுரு சாமி மடத்தில் தங்கியிருந்த சித்தருக்கு அது தெரிந்து விடுகின்றது, இப்படி வாங்காமல் வருகின்றார்களே என்று கோபப்பட்டிருக்கின்றார், அதில் பல இரகசியங்கள் இருக்கின்றதே, இப்படி கைக்கு வந்ததை தட்டி விட்டு வருகின்றார்களே என்ற ஆதங்கப் பட்டிருக்கின்றார்.
  18. சித்தர் எந்த சமாதி சென்றாலும் அந்த சமாதிக்கு உரிய ஆன்மா சித்தர் மேல் பிரவேசமாகி பேசுவது வழக்கம். இது திருவாரூர் அண்ணன் சமாதியில் அண்ணன் சுவாமிகள், பாப் அய்யா சித்தர் பீடத்தில் பாப் அய்யா சித்தர், கோரக்கர் சித்தர் பீடத்தில் சித்தர் கோரக்கர், திருவண்ணாமலையில் இடைக்காடர், என பல இடங்களிலும் இந்த அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
  19. காசி கங்கையில், காசி விசுவநாதருக்கு புறக்கரையில், திரு. மணிசாமி பாதத்தை எடுத்து, சித்தர் அவரது சிரசின் மேல் வைத்து தீட்சை தந்துள்ளார். அந்நேரத்தில் ஜீவ காந்த சக்தி தன் மேல் இறங்கியதை திரு. மணிசாமி உணர்ந்துள்ளார். இதேபோல துங்கபத்ரா, அயோத்தி என ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாக தீட்சை அருளியுள்ளார்.
  20. 2011 ஆடி கடை வெள்ளி முடித்து, வியாழக்கிழமை அன்று இரவு பதினொரு மணி அளவில், திரு. மணிசாமி சித்தரை சந்திக்கின்றார், அவரை சந்தித்து, பேசும் போது, சித்தர், “டேய் எப்படா எனக்கு நாள் குறிச்சிருக்க?” என்று கேட்க, அவரும் கணித்து பார்த்து, சமாதியாகும் காலம் வந்துவிட்டது என்று கூறியிருக்கின்றார். பத்து நாள் கால அவகாசம் இருப்பதாகவும் அதற்குள் என்ன தெளிவு செய்து கொள்ள வேண்டுமோ அதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை சொல்லி எட்டாவது நாள் அவர் உயிர் பிரிந்து விடுகின்றது. இப்படி கூட்டை விட்டு உயிர் கிளம்ப போகின்றது என்பதை முன்னதே சித்தரும் அறிந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Friday, July 20, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (14): திரு. இராமலிங்கம் சு. மற்றும் திரு. காசி இரா. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (14): திரு. இராமலிங்கம் சு. மற்றும் திரு. காசி இரா. அவர்களின் இறை அனுபவங்கள். 

திரு. இராமலிங்கம். சு (Ramalingam)
நேர்காணல் விவரம்: 

இடம்: நாகை, திரு. இராமலிங்கம் அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. திரு. இராமலிங்கம் அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையை சந்திக்கும் போது அவரது இரு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண், இருவருக்கும் மூன்று, ஐந்து, வயது இருந்திருக்கும், சித்தர் அவரிடம் முதலில் பேசிய வாக்கியம், “இதோ வந்திருக்கான் மச்சான்” என்பதே! இந்த உறவு முறை திருமணம், இரத்த உறவை பொருத்தில்லை, மாறாக ஆத்ம பந்தத்தை பொருத்து, என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். பட்டறைக்கு வந்த ஒருவர் சொல்ல, சித்தரை பார்க்க வேண்டி நான்கு ஐந்து முறை தேடி சென்றிருப்பார். ஒவ்வொரு முறையும் காலை சென்று மாலை வரை காத்திருந்து, சந்திக்க இயலாமல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்ப, கடைசி முறை சந்திப்பு கிட்டி இருக்கின்றது. அந்த சந்திப்பின் போது அவர் வாழ்க்கையில் சொல்ல முடியாத, அளவு கடந்த கஷ்டங்கள் அனுபவித்து வந்ததாகவும், சாப்பாட்டிற்கே இல்லாத நிலையில் இருந்ததாகவும், அந்த தருணத்தில், “மச்சான்” என்று அய்யா உறவு பாராட்ட, அது அவருக்கு தீயிட்ட வடுவின் மேல் மயில் இறகால் குளிர்ந்த பச்சை ரசத்தை தடவி விட்டாற் போல உணர்ந்திருக்கின்றார், ஏக நிறைவுடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். பிறகு அங்கே அவருக்கு உணவு பரிமாறி, அவரை பற்றியும் அவரது தொழிலைப் பற்றியும் மேலும் அறிந்து கொண்டு, தன்னை மாதம் ஒரு முறை வந்து பார்க்குமாறு உத்தரவு தருகின்றார். “நல்லாயிருப்பே”, ”கூடவே இருப்பேன்”, “எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று வாக்கும் தருகின்றார். அந்த நிகழ்விலிருந்து, திரு. இராமலிங்கம் அவர்கள், சுமார் இருபது, இருபத்தியந்து வருடங்களாக சித்தருக்கு தொடர்ந்து சேவை செய்து வந்திருக்கின்றார்.
  2. ஆரம்ப காலத்தில், அதாவது இருபது, இருபத்தியந்து வருடங்களுக்கு முன், பெரும் கஷ்டம் அனுபவிக்க, அதன் பொருட்டு இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவுடன், பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அன்று, தக்க நேரத்தில், சித்தர் யதார்த்தமாக அவரே, அழையாத விருந்தாளியாக வீடு தேடி வருகின்றார். அன்று சித்தர் வரவில்லை எனின் அடுத்த நாள் காலை உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்பதை நன்றி உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
  3. சித்தரை காணும் முன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர். அவருடன் நெருங்கி பழக பழக, ஏன் ஆரம்ப காலங்களில் அவரிடமே பணம் வாங்கி மது அருந்தி இருக்கின்றார், இன்று குடி பழக்கத்தில் இருந்து முழுவதுமாய் விடுதலைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  4. அவரிடம் வருபவர்களுக்கு, தன்னை (சித்தரை) மனதில் வைத்து நீ மண்ணை எடுத்து தந்தாலும் குணம் பெறுவர் என்ற வாக்கின் படி, திரு. இராமலிங்கம் அவர்களும், விஷ கடி, தீய சக்தி உபாதைகள், உடல் நல குறைவு, என்று வருபவர்களுக்கு, விபூதி தந்திருக்கின்றார். அவர்களும் அதனை வாங்கிக் கொண்டு நலம் பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியையும் இங்கு பதிவு செய்துள்ளார்.
  5. சுமார் பதினெட்டு வருடங்கள் சபரி மலை பயணம் முடித்து, குரு சாமி என்று பட்டமும் பெற்றுவிட்டாயே… மகர ஜோதி தரிசனம் கண்டுள்ளாயா? என்று சித்தர் வினவ, தான் பார்த்ததில்லை என்று திரு. இராமலிங்கம் பதில் அளித்திருக்கின்றார். அதனோடு நிறுத்தாமல், எனக்கு இங்கேயே ஜோதி தரிசனம் காட்டினால் தான், நான் மலையேறுவேன் என்று முரண்டு பிடித்துள்ளார். இங்கேயே பார்க்கலாமா என்று கேட்க, சித்தரும் பார்க்கலாம் என்று ஆமோதித்திருக்கின்றார். அதன்படியே சித்தரும் அவரை பூஜை அறை அழைத்து சென்று, அவரை முன்னிலைப்படுத்தி வழிபாட்டை ஆரம்பிக்கின்றார், அன்று அதன் நிகழ்வில் நான் பங்கேற்றதால் எனது அனுபவத்தையும் இதனுடன் சாட்சியாக பதிவு செய்து கொள்கின்றேன். திரு. இராமலிங்கம் அவர்களை கண்ணாடி முன் நின்று வழிபட சொல்கின்றார். அனைவரும் சப்தம் எழுப்பி வழிபாடு செய்கின்றோம், நான் அவருக்கு பின் வலது பக்கம் நிற்க, சித்தர் அய்யா பிள்ளை அவருக்கு பின் இடது பக்கம் நின்று கொண்டு இருந்தார். இப்படி வழிபாடு நடந்து கொண்டிருக்க, இடையில் திடீரென்று, திரு. இராமலிங்கத்தை பார்த்தாயா என்று வினவ, அவர் இல்லை என்று கூற, சித்தர் அவரது முதுகு கீழ் தண்டை தீண்டுகிறார், பாதத்தால் தீண்டினாரா இல்லை கைவிரலால் தீண்டினாரா என்று எனக்கு ஞாபகமில்லை, திரு. இராமலிங்கத்தின் கூற்றின் படி, சித்தர் காலால் அழுத்தினார் என்று அறிய வருகின்றோம். அந்த தீண்டலின் பிறகு, அவருக்கு ஒளி தரிசனம் அகத்தினுள் கிடைத்திருக்கின்றது. சுமார் பத்து நிமிடங்கள் அதே நிலையில் இருந்ததாக சாட்சி அருளியுள்ளார். அதன் பின்னரே முடி கட்டுவதற்கு ஆயுத்தமாகின்றார். அதுவே முதல் முறை, அவர் அகத்தினுள் ஒளி தரிசனம் காண்பது. இந்த மாதிரி பல அனுபவங்கள் சித்தரிடம் நேரிடையாக அனுபவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.
  6. தனது பெண்ணின் திருமணத்தின் போது ஒரு லட்சத்து அறுபதனாயிரம் பணம் கிடைக்கப்பெற்று திருமணத்தை நல்ல விதமாக நடத்தியும் இருக்கின்றார், அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது, என்று புரியவுமில்லை, அது கடனாக தரப்படவில்லை என்பதே இதில் குறிப்பிடத்தக்கது. சித்தர் கொடுத்த வாக்கின் படி காசே இல்லாமல் ஆரம்பித்தும், திருமணத்தை நல்லபடி முடித்து வைத்திருக்கின்றார்.
  7. ஹோமம் முடிந்த கையுடன் நாகவிளாகத்தில் திருக்குரான் ஓத, திரு. இராமலிங்கம் அவர்கள், அங்கிருந்து கிளம்பி விடுகின்றார், வீட்டிற்கு வந்த சற்று ஓய்வு எடுக்க, சயனத்தில், அய்யா வந்து முல்லை பூவும், பூந்தியும் தருகின்றார், அந்த உணர்வு கிடைத்து விழித்த உடனே கிளம்பி நாகவிளாகம் வந்து விடுகின்றார். தாள விருச்சத்திலும் இப்படி பல இறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றது.
    திரு. காசி. இரா (Kasi)
  8. திரு. இராமலிங்கம் அவர்களின் மகன், திரு. காசி அவர்கள் தனது ஆரம்ப வாழ்க்கைக்கு, செய்தி சொல்லி வழி நடத்தியுள்ளார்கள். சித்தர் பாடும் போது, மெய் மறந்த நிலைகளை அனுபவித்துள்ளார், மேலும் அந்நிலையில் அவர்களுக்கு கை கால் அமுத்தி விடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Saturday, July 14, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (13): திரு. ஆதவன் ஆ. மற்றும் திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (13): திரு. ஆதவன் ஆ. மற்றும் திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் இறை அனுபவங்கள்.

ஆதவன். ஆ (Adhavan)

நேர்காணல் விவரம்:


இடம்: நாகை, சித்தர் அய்யாபிள்ளை சமாதி
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. புது தில்லியில் இருந்து அஜ்மீர் தர்கா நோக்கி திரு. ஆதவன் அவர்களும் சித்தர் அய்யா பிள்ளையும் பேருந்து நெரிசலில், படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணிக்கின்றனர். அவருக்கு அந்த தனிமை அச்சம் தர, அதனை சித்தரிடம் தெரிவித்திருக்கின்றார். சித்தரும் நீ ஏன் தனியாக இருப்பதாய் நினைக்கின்றாய், எதிரில் பார் என்று கட்டளையிட, திரு. ஆதவன் அவர்களுக்கு ஒரு ஒளி ‘பளிச்’ என்று தென்படுகின்றது. மேலும், நாம் இருவரும் இன்று இரவு தூங்க போவதில்லை, மாறாக அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்க போகின்றோம் என்று சொல்ல, திரு. ஆதவன் அவர்களும் அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்கின்றார். அதனை பார்க்கும் போது மனதில் வேறு எந்த எண்ணமும் எழவில்லை என்றும், நடத்துனர் வந்து “ஆஜ்மீர் தர்கா” என்று சொல்லிய போது அந்த ஒளி மறைந்து விடுவதையும் நினைவு கூறுகின்றார். இந்த நிகழ்வு நடக்கும் போது அவருக்கு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும், மேலும் இவர் திரு. கோவிந்தராஜன்* அவர்களின் மூத்த மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. முதல் சபரி மலை பயணத்தின் போது மிகவும் சிறிய வயது, பாலிய பருவம் முடியாத தருணம், சிறிய பாதை வழியாக செல்கின்றோம். அந்த பயணத்தில் நானும் உடன் செல்கின்றேன். இடையே இடையே களைப்பு தாளாமல், நடக்க முடியாமல் தவித்திருக்கின்றார். தேநீர் வாங்கி தருகின்றனர். அதற்கு பின்னரும் அவரால் மலை ஏற முடியவில்லை. பின்னர் சித்தர் அவனை விடு அவன் நடப்பான் என்று சொல்ல அவருக்குள் புது பலம் வந்ததது போல் உணர்கின்றார். அதன் பின் களைப்பின்றி, சோர்வடையாமல் மலை ஏறுகின்றார். சித்தர் கைப்பிடித்து பதினெட்டு படு ஏறுகின்றார். சித்தர் நீ ஏறிவிடுவாய் என்று சொல்ல அவரும் ஏறுகின்றார். யாரும் அவரை பிடிக்கவில்லை, இருந்தும் யாரோ கையைப் பிடித்து தூக்கி விட்டதை போல உணர்கின்றார்.
  3. காரைக்குடியா, இல்லை திருச்சியா என்று அவருக்கு நினைவில்லை, ஒருவர் சித்தரின் பர்ஸை திருடி விடுகின்றார், வேறு ஒருவர் சித்தரிடம் வந்து சாமி உங்கள் பர்ஸ் இருக்கின்றதா என்று கேட்க, சித்தர் எனக்கு தெரியும், அவனே வந்து தருவான் என்று சொல்லுகின்றார். அதேபோல் பர்ஸை திருடிய நபரும் வந்து தர, சித்தர் ஒரு அடி அடித்து விடுகின்றார், எடுத்த நபரும், சாமி மன்னிச்சுகங்க சாமி யாருனு தெரியாம பர்ஸை எடுத்து விட்டேன் என்று சொல்லிவிட்டு ஓடி விடுகின்றார்.
  4. ஒரு முறை தாள விருச்சக்கத்தில் அனைவருக்கும் புஷ்பம் தந்து அமரவைக்கின்றார். ஒவ்வொருவரையும் வினவுகின்றார், திரு. ஆதவன் அவர்களுக்கு புஷ்பம் தன்னை கட்டுவதை போல ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கின்றது, அதற்கு பின், அங்கு பேசுவதும் எதுவும் கேட்கவில்லை, ஒரு வித ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விடுகின்றார்.
  5. பலருக்கு சித்தர் செய்தி சொல்லுவதையும், ஒரு சிலர் மலேசியாவில் இருந்து வந்து செய்திக் கேட்டு விட்டு போனார்கள் என்பதையும் நினைவு கூறுகின்றார். மேலும் சித்தர் தனது இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் மிகவும் கஷ்டப்பட்டு, வறுமையில், சுற்றத்தாரிடம் யாசகம் செய்து வாழ்ந்து வந்தார் என்பதையும் நினைவு கூறுகின்றார்.
  6. ஒருமுறை வெளியூர் மலை பயணத்தில், தனது பன்னிரெண்டு பதிமூன்றாம் வயதில், இறை நிலையால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை தலைகீழாக தூக்கி ஒரு பேப்பர் தாளை முன்னும் பின்னும் ஆட்டுவது போல சித்தர் ஆட்டி இருக்கின்றார், அத்தருணம் திரு. ஆதவன் அவர்கள் இரு கையை கூப்பி அச்சம் ஏதுமின்றி அதன் அசைவை அனுபவித்திருக்கின்றார்.
  7. அது சுரளி மலை பயணம், திரு. ஆதவன் அவர்களின் பாலிய பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வு. அவருக்கு அது ஞாபகம் இல்லையெனினும், அந்த பயணத்தில் அவருடன் இருந்த நான் (ரோஸாரியோ ஜோசப்), சாட்சியாக அந்த நிகழ்வை இங்கு பதிவை செய்து கொள்கின்றேன். சுரளியப்பர் சன்னிதிக்கு மேல் உள்ள குகையில் வழிபாடு முடிந்த பின், எதிரில் ஒரு சிறிய குகையிலும் வழிபாடு செய்தோம், அங்கு, சென்று வழிபாடு ஆரம்பித்த சில நொடிகளிலேயே திரு. ஆதவன் ஆசனமிட்டு அமர்ந்திருவர் பின்னோக்கி விழுந்து விடுகின்றார். கண்களும் சொருகி விடுகின்றது, ஆனால் கால்கள் மடித்தவாறு அப்படியே இருக்கின்றது. வழிபாடு முடிந்த பின்னும் அதே நிலையில் இருக்கின்றார். அவரை எழுப்ப முயன்றோம், என்ன கூப்பிட்டும் எழவில்லை, தட்டியும் பார்த்தோம் எழவில்லை, மிகவும் சிரமப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக சித்தர், மிகவும் போராடி, அவரின் ஆழ் நிலை தியானத்தை (சித்தகத்தை) களைத்து விடுவித்து எழுப்புகின்றார். அந்த சிறு வயதில் அத்தகைய கிடைப்பதற்கு அரிய முதிர் நிலை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது!
  8. மேலும் ஊர்வலத்தின் போது அருள் நிலையில் ஆடுவார் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். அதே, சித்தர் சொல்லிற்கு இணங்க, பிறர் அருள் நிலையில் ஆடுவதற்கும், யோக நிலைக்கு தள்ளப்படுவதிற்கும், சாட்சியாக விளங்குகின்றார். திரு. இராமர் அவர்கள் வசிப்பிடத்தில், சித்தர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க, அதற்கு ஏற்றாற் போல, ஒவ்வொருவரும் அருள் நிலையில் சித்தரிடம் வருவதை கண்டு அதிசயித்துள்ளார்.
  9. சபரிமலை பயணத்தில் இவரது கழுத்தில் மாட்டியிருந்த, பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலையும், துளசி மாலையும், பிரிக்க முடியாதவாறு, பின்னிப்பிணைந்து கிடந்தன. அந்த மாலையை சித்தர் தமது பேழையில் வைத்திருந்தார் என்பதும், அதனை அவரது உடலை அடக்கம் செய்யும் போது சேர்த்து அடக்கம் செய்து விட்டதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.



    மேலுள்ள படத்தில் பேழை எனது கையிலும், மாலை திரு. மகாபலிபுரம் ரவி அவர்களின் கையிலும் இருப்பதை காணலாம். இந்த புகைப்படம் சித்தர்கள் அவர்களை 08/21/2011 அன்று அடக்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது!
  10. திருமதி. தவமணி கோவிந்தராஜனின்* பதிவுகள் பின்வருமாறு:
    1. திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் அக்கா, ருக்மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் வாழ்நாளை அதகரிக்கும் எண்ணத்துடன், தங்கையான தவமணியை திருமணம் செய்து கொள்கின்றார். அதேபோல் திருமதி. ருக்மணி கோவிந்தராஜன் அவர்கள், தனது ஆயுள் நீடிக்கப்பட்டு இருபது வருடங்கள் வாழ்கின்றார்.
    2. 1986ஆம் ஆண்டு, அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகத்தின் போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உயரற்று கிடந்திருக்கின்றார். அனைவரும் இறந்து விட்டதாக எண்ணி உடலை கிடத்திவிடுகின்றனர். பின்னர் உயிர் வந்து, கோயில் கலசத்தின் மேல் கால் வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றார்.
    3. கோமியத்தில் விளக்கு எரிந்ததை நினைவு கூறுகின்றார்கள்.
    4. ஆவி விரட்டுதல், செய்தி கூறுதல், இப்படி பல நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்திருக்கின்றார். செத்து விட்டதாக கிடப்பில் இருந்தவர்கள் மேலிருந்த ஆவியையும் ஒரு முறை விரட்டி இருக்கின்றார்.
    5. மருத்துவர் கை விரித்த நிலையில், இறந்து விடுவான் என்று நாலு பேர் தூக்கி வந்து போட்ட ஒருவர் மேல் இருந்த ஆவியை விரட்டி, அன்றே சாப்பிட வைத்திருக்கின்றார். சாப்பிட முடியாமல் இருந்த அவரும், அங்கே, அவர் இல்லத்தில் உணவு அருந்திருக்கின்றார். பின்னர் நடக்க முடியாமல் வந்த அவர் எழுந்து, நடந்து சென்று, காரில் ஏறி கிளம்பி இருக்கின்றார்.
    6. அதேபோல் அவர் தூரத்தில் தேவூர் வரும்போதே இங்கு ஆவி பிடித்த ஒரு பெண், அவன் என்னை விரட்ட வருகின்றான் என்று கூறி, ஆற்றில் போய் விழுந்து விடுகின்றாள். சித்தர் வந்து அவர்களை குணப்படுத்தி, சாப்பிடாமல் இருந்த அவர்களை சாப்பிட வைத்து அனுப்பி வைக்கின்றார்.
    7. ஒரு காலத்தில், அவர்களது ஊரில், தாள விருச்சம் என்ற ஒரு தாவிரம் மட்டும் சுமார் நான்கு ஆறு அடி தரையளவு மட்டுமே வளர்ந்திருந்தது! திருமதி. தவமணி கோவிந்தராஜனின் தாய் தகப்பன் காலத்திற்கு முன்னிருந்து, அது வளராமல் அதே நிலையில் அப்படியே இருந்திருக்கின்றது. சித்தர் அய்யா பிள்ளை வந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் வழிபாடு செய்ததற்கு பின், 25–30 அடி வளர்ச்சி அடைந்து பெரும் மரமாக இன்று காட்சியளிக்கின்றது.
* இங்கு சித்தர் என குறிப்பிடாமல் திரு. கோவிந்தராஜன் என்று அழைக்க காரணம், சித்தர் அய்யா பிள்ளை என்பது அவரது ஆன்மாவிற்கு கொடுத்த பெயர், அந்த கூட்டினை வைத்தும், அந்த கூட்டின் மூலம் கிடைத்த உறவினை வைத்து சித்தரை உறவுகளின் கட்டுக்குள் காட்ட இயலாது என்பதால். மேலும், அவரது முதல் மனைவி இறந்த போது, தாலியை கணவராய் தான் வாங்காமல் அவரது மூத்த மகனை வாங்கி சொல்லுகின்றார். அதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த சிலர் அதனை எதிர்க்க அவர், “நான் எப்படி வாங்க இயலும்” என்று என்னிடம் ஆதங்கப்பட்டார். இப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்தார். எனவே அவரை பொது விடயங்களில் குறிப்பிடும் போது, சித்தர், அய்யா, குரு, சாமி, என்று மொழிவது வழக்கம், அதுவே குடும்ப விடயங்களில் குறிப்பிடும் போது, ‘அய்யா’ மற்றும் திரு. கோவிந்தராஜன் என்ற அவரது இயற் பெயரை வைத்து குறிப்பிடுவது வழக்கம். எனது ஏடுகள் அனைத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றேன். சித்தர் என்று அழைத்து விட்டால், அந்த உயிரை யாரும் உரிமை கோராலாகாது, அன்று முதல் அது பொது வஸ்துவாகி விடுகின்றது. அப்படி மீறி உரிமை கோரினால் அது சித்தர் என்ற பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விடுகின்றது. இல்லை பொதுவாக ‘அய்யா’ என்று இரு சாராரும் அழைக்கலாம்.

குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Tuesday, July 10, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (12): திரு. ஆனந்த் பா. மற்றும் திருமதி. ஆனந்த் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (12): திரு. ஆனந்த் பா. மற்றும் திருமதி. ஆனந்த் அவர்களின் இறை அனுபவங்கள்.

திரு. ஆனந்த். (Anand. B)

நேர்காணல் விவரம்:

இடம்: நாகை, திரு. ஆனந்த்/ராஜா அவர்களின் வசிப்பிடம்.
நாள்: வைகாசி 11, 2018 வெள்ளிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. 1999 ஆம் ஆண்டு, சுமார் ஆறு மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு, இரு நண்பர்கள் மூலம், சித்தர் அய்யா பிள்ளையை, காரைக்காலில் அன்பர் ஒருவர் வீட்டில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றார். அழைத்து சென்றவர் இருவர் அருகில் அமர, திரு. ஆனந்த் அவர்கள் கடைசி வரிசையில் அமருகின்றார். அனைவருக்கும் கடலை மிட்டாய் தரப்படுகின்றது, அதனை அனைவரும் உண்டும், சித்தர் பேசுவதை கேட்டவாறும் இருக்கின்றனர். திரு. ஆனந்த் அவர்களுக்கும் மட்டும் அதனை உண்ண மனம் வரவில்லை, வாயில் வைப்பதும், எடுப்பதும், எங்கு உண்டால் கவனக்குறைவு ஏற்பட்டு விடுமோ என்ற அய்யத்துடன் சித்தர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்திருக்கின்றார். இப்படியே இரண்டு மணி நேரம் சென்றிருக்கும், அவருக்கு முன் பார்க்க இருந்த அனைவரும் பார்த்துவிட்டு செல்ல, அவருக்கான வாய்ப்பு வரும் போது, வாங்கிய கடலை மிட்டாயை உண்ணாமல், அதனை உள்ளங்கையில் வைத்தவாறு சித்தர் அருகே செல்கின்றார். சித்தர் கையில் என்னவென்று கேட்க? அவர் கடலை மிட்டாய் என்று பதில் சொல்ல, சித்தர், அனைவரும் உண்டுவிட்டனர், நீ ஏன் உண்ணவில்லை என்று வினவுகின்றார், அவரும் காரணத்தை சொல்லுகின்றார். சித்தர், “ஏன்? என்னாச்சு உனக்கு?” என்று வினவ, திரு. ஆனந்த் அவர்களும் தான் சித்தரை காண வந்ததாகவும், படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதாகவும், தன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வந்ததாகவும் பதில் அளிக்கின்றார். சித்தர் அதனை அமோதித்து, அவரை கடலை மிட்டாயை உண்ணுமாறு சொல்லிவிட்டு, பிறகு கண்களையும் மூடுமாறு சொல்லுகின்றார். திரு. ஆனந்த் அவர்கள் கண்களை மூடி அமர சித்தர் ஒரு பாடலின் இரண்டு, மூன்று வரிகள் மட்டும் பாடுகின்றார். அந்த பருவத்தில் அவர் சிவபுராணம், மாரியம்மன் தாலாட்டு பாடுவது வழக்கம். பாடிய பிறகு இப்பொழுது கண்களை திறந்து பாரு என்கின்றார், திரு. ஆனந்த் அவர்களும் பார்க்க, அந்த நேரம், சித்தர் மீசையை கீழ்நோக்கி தடவி விட, சித்தரின் மீசையை பார்க்க, திரு, ஆனந்த் அவர்களுக்கு சித்தரின் முகம் சிம்ம முகமாக தெரிகின்றது, அந்த முகத்தை தொடர்ந்து பார்க்கமுடியாமல் கண்களை திரு. ஆனந்த் முடிக் கொள்கின்றார். நினைவு திரும்பி, கண் விழித்து பார்க்க, திரு. ஆனந்த் அவர்கள் வீட்டு முற்றத்தில் சித்தரின் காலடியில் கிடக்கின்றார். அந்நிலையில் அவரால் பேச முடியவில்லை, காரணம் தன் வாயில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை உணர்கின்றார். அதை கவனித்தவாறு சித்தர் அவர் பயத்தை போக்கும் வண்ணம், ஆமோதித்தவாறு, வாயில் இருப்பதை உண்டுவிட்டு எழுமாறு கூறுகின்றார். கடித்த பின்பே அது எலுமிச்சம் கனி என்பதை திரு. ஆனந்த் அவர்கள் உணர்கின்றார். கனியை உண்ட பின், ஆடைகளை களைந்துவிட்டு, குளித்துவிட்டு வருமாறு சித்தர் கூறுகின்றார். இவரும் அவ்வாறு செய்து விட்டு வர, அங்கு, அனைவரும் உணவு உண்ண தயாராக இருக்கின்றனர். இவரையும் அழைத்து செல்கின்றனர். சித்தர் அய்யாபிள்ளையுடன் சேர்த்து ஐந்து ஆறு பேர் அன்று அந்த இல்லத்தில் உணவு அருந்துகின்றனர். அன்று, திரு. ஆனந்த் அவர்கள், அவர்கள் ஐந்து பேர் உண்ட உணவை உண்கின்றார். அந்த இல்லத்தாரும் இரண்டு முறை சோறு வடித்து கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு முடிந்த பின், சித்தர், திரு. ஆனந்த் அவர்களிடம், தன்னை சந்திக்க வந்துவிட்டாய் இந்த நிகழ்வும் நடந்தேறியது எனக்காக நீ என்ன செய்ய போகின்றாய் என்று வினவுகின்றார். அவரும் தன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்று சொல்ல, சித்தரும் தனக்காக பால் குடம் எடுக்குமாறு கூறுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.
  2. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து சொன்னவாறு பால் குடம் எடுக்க இராதாமங்கலம் செல்கின்றார். சித்தரும் பால் குடத்தை தூக்கி வைக்கின்றார். விளையாட்டு தனமான நிலை என்றாலும், அவ்வப்பொழுது கண்கள் மூடி திறக்க அதே நிலையில் வந்து சேருகின்றார். சித்தரே பால் குடத்தையும் இறக்கி வைக்கின்றார். பிறகு மக்கள் அனைவரும் அபிஷேகம் பார்க்க அமர்ந்திருக்க, சித்தர் அம்பாள் கோவில் படியில் அமர்ந்திருக்க, திரு. ஆனந்த் அவர்கள் பலிபீடத்திற்கு முன் அமர்ந்திருக்கின்றார். கோவில் குருக்கள் அம்பாள் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டு இருக்கின்றார். அப்பொழுது, சித்தர் பால் குடத்தை எடுத்து, கீறி, உள்ளே தரும் போது, திரு. ஆனந்த் அவர்கள் மனதில் ஒரு எண்ணம் எழுகின்றது, “பாலை கட்டி விட்டது நீ, தூக்கி விட்டதும் நீ, அப்புறம் எதுக்கு அவனை கொடுத்து ஊத்த சொல்லுற நீயே ஊத்த வேண்டியது தானே?” என்று. இதற்கு பதிலாக, பூஜை முடிந்து, பிரசாதம் கொடுத்த பின்பு, சுற்றி விபூதி கொடுத்த வந்த போது, சித்தர், திரு. ஆனந்திடம் சொல்கின்றார், “நீ நினைச்சது சரி தான், ஆனா அத இப்ப செய்ய முடியாது இன்னும் கொஞ்சம் காலம் போகனும், இப்ப நம்ம அத செய்யக் கூடாது, இன்னும் கொஞ்சம் காலம் போனோன நீ சொன்ன மாதிரி செய்யலாம்.” என்கின்றார். இந்த பதில் திரு. ஆனந்த் அவர்களை ஆச்சிரியப்பட வைக்கின்றது, எப்படி நம்ம மனசுக்குள் நினைத்ததிற்கு இவர் பதில் சொல்லுகின்றார், அப்ப சாமி ஏதோ பெரிய விஷயம் செய்து கொண்டு வருகின்றார், என்று எண்ணத்தை அது எழுப்புகின்றது.
  3. 1999 லிருந்து 2006 வரை இப்படி பங்குனி உத்தரத்தில் வருடாந்திர பால் குடம், ஆடி கடை வெள்ளியில் வருடாந்திர ஹோமம், மாதாந்திர பருவ பூஜைகள் என செல்லும் போதெல்லாம், ஒருவருடைய வலி எடுத்தல், ஆவி விரட்டுதல், என பல இறை அனுபவங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கின்றார். அந்த பருவத்தில், 2006ல், திரு. ஆனந்த் அவர்களுக்கு பெண் பார்க்கின்றனர். அவர் தென்காசியில் இருக்க வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கின்றனர். வீட்டுடன் சென்று பெண் பார்த்து விட்டு, நிச்சியம் செய்ய குடும்பத்தோடு செல்கின்றனர், திரு. ஆனந்த அவர்கள், சித்தர் அய்யா பிள்ளை அவர்களை அழைத்து வேனில் முன் சீட்டில் அமர வைத்து அழைத்து செல்கின்றார். வேன் உதய சூரியன் போட்டிருந்த பெரிய வீட்டின் வாசல் முன் நிற்கின்றது. அது பெண்ணின் பெரியப்பா வீடு என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கண்ட சித்தர், மூன்று மாதங்களுக்கு முன் வெளியூர் சென்று இந்த வழியே வந்த போது, எப்படி இந்த ஊரில் இவ்வளவு பெரிய வீடு அதுவும் சூரியன் போட்டு என்று ஆச்சரியப்பட்டதை பகிர்ந்து கொள்கின்றார்? மூன்று மாதத்திற்கு முன்னரே இந்த நொடிக்கான வேலை ஆரம்பித்தாகிவிட்டது என்பதற்கான சான்று அது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, சித்தர் அய்யா பிள்ளையை தனது குருவென்று, தான் நிச்சியம் செய்த பெண்ணிடம், திரு. ஆனந்த் அறிமுகப்படுத்துகின்றார், சொன்ன அடுத்த நொடி, திரு. ஆனந்த் வணங்குவதற்கு முன், அந்த பெண், ஆசிர்வாதம் பெறுவதற்கு சித்தரின் காலில் விழுகின்றார். இந்த நிகழ்வு அவருக்கு மகிழ்ச்சியை தருகின்றது. சொல்லியும் உணராத நிலையில், உணர்த்தும் முன்னரே உணர்ந்தமையை பொருட்டு அந்த நிகழ்வு சித்தருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கின்றது.
  4. திரு. ஆனந்த் அவர்களுக்கு தெரிந்த அன்பர் ஒருவர், சொரியாசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு தீர்வாக, காண்ட நாடியில் சொல்லப்பட்டிருந்ததை போல, தென்காசி அருகே, கடனாநதி அணையின் மேற்பக்கம் உள்ள தீர்த்ததில் குளிக்க வருகின்றார். அதன்பொருட்டு அவர்கள் வர… திரு. ஆனந்த் அவர்களும், சித்தர் அய்யா பிள்ளையை அங்கு வரவழைக்கின்றார். சித்தரும் ஒரு சில அன்பருடன் சேர்ந்து மேற்சொன்ன தீர்த்ததில் நீராட வருகின்றார். அங்கு அனைவரும் நீராடுகின்றனர். அந்த நீர் சுவையாக இருந்திருக்கின்றது. அந்த நீரை சித்தர் எடுத்து தலை மேல் ஊற்றும் போது, உடல் வெறும் கூடு போல் இருந்ததையும், ஒரு கல்லின் மேல் நீர் ஊற்றுவதை போல இருந்ததாகவும் உணர்ந்திருக்கின்றார். அதாவது தான் அல்லாத ஒரு கூட்டின் மேல் நீர் வார்த்த உணர்வு அது! அங்கு, நோயுற்ற அன்பரையும் நன்கு குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர், அவரது உடல் நோயும் அடுத்து இரண்டு மூன்று மாதங்களில் சரியாகி விடுகின்றது.
  5. நீராடலுக்கு பின்பு மலையை விட்டு இறங்கி வரும் போது, ஒரு இடத்தில் திரு. ஆனந்த் அவர்கள், தன்னை அறியாமல் ஒரு சர்பத்தை தாண்டி செல்கின்றார், அவர் தாண்டிய பின், பாதையில் படுத்திருந்த அந்த கருமை நிற சர்ப்பம், அவரின் தோல் உயரத்திற்கு சீறி எழுந்து இருக்கின்றது, அதன் இரு பற்களும் சிங்கத்தின் பற்களை போல இருந்திருக்கின்றன. பின் அது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து அங்கிருந்து சென்று விடுகின்றது. முன் சென்றவர்களுக்கு பயம் தெரியவில்லை, பின் வந்த சித்தர் அய்யா பிள்ளைக்கு இந்த நிகழ்வு பயத்தைக் கொடுத்து, நடுக்கத்தை தந்து விடுகின்றது. இது திரு. இராமர் அவர்களின் குறிப்பில், பதிவு எண் 19வுடன் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு.
  6. அடுத்ததாக, செம்பகாதேவி அருவிக்கு மேல், சித்தர் அகஸ்தியர் வாழ்ந்த சித்தர எழுத்துக்கள் பொதிக்கப்பட்ட மலைக்கு வனத்துறையினரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு செல்கின்றனர். குற்றால மெயின் அருவியிலிருந்து ஆறு—ஏழு கிலோமீட்டர் தொலைவில் அந்த அருவியுள்ளது. அந்த பயணத்தில் திரு. ஆனந்த் அவர்களுடன், திரு. இராமர், சித்தர் அய்யா பிள்ளை, வாகன ஓட்டுனர், மற்றும் நோயுற்ற அன்பர் அவரின் உறவினர் என ஐந்து–ஆறு நபர்கள் சென்றுள்ளனர். அங்கு சித்தர எழுத்துக்கள் உள்ள இடத்தில் நீர் குழாய் வழியாக வருவதை போல சிலுசிலுவென நீர் விழுந்திருக்கின்றது. அதன் சுவை கசப்புடையதாக இருந்திருக்கின்றது. அதில் குளித்துவிட்டு நல்ல, சிறப்பானதொரு தூய்மையும், புத்துணர்வும் கிடைக்கப்பெற்றிருக்கின்றனர். வழிபாடெல்லாம் முடித்துவிட்டு மதியம் நான்கு மணியளவில் மலை இறங்குகின்றனர். இறங்கும் போது திரு. இராமர் அவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்படுகின்றது. பத்து, இருபது அடிக்கு ஒருமுறை அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட, சித்தர் அவர்களை என்னவென்று வினவுகின்றார். திரு. இராமர் அவர்களும் தனக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுப்போக்கை பற்றி சொல்லுகின்றார். சித்தர் தனது துண்டை எடுத்துக் கொடுத்து தலையில் கட்டிக்கொண்டு கீழ் இறங்குமாறு சொல்லுகின்றார். மேலும் இங்கு எங்காவது நீ அமர்ந்துவிட்டால் உன்னைத் தூக்கிக் கொண்டு கீழ் இறங்க இயலாது என்பதால் எப்படியாவது முயற்சி செய்து கீழ் இறங்கி விட வேண்டும் என்று பரிவுடன் கட்டளையிட்டு இருக்கின்றார். மிகவும் சிரமப்பட்டு, மல்லுக்கட்டி, திரு. இராமர் அவர்களும் மலையை விட்டு கீழே இறங்கி விடுகின்றார். மாலை சுமார் ஐந்து மணி அளவிருக்கும், அனைவரும் மலை இறங்கிவிட்டனர். திரு. இராமர் அவர்களால் அதற்கு மேல் நடக்க இயலவில்லை.
  7. உடனே திரு. இராமர் அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஒரு தனியார் ஹாஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றனர், அங்கு அந்த மருத்துவர் அவரது மலத்தை சோதித்து பார்த்து காலரா முற்றிப்போய் விட்டது, இனி இவர் பிழைக்க மாட்டார், உடனே அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி விடுகின்றார். ஆறு, ஆறு-அரை மணியளவில் தென்காசி அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கிருந்த மருத்துவர், இவர் யார்? என்னவென்று? விசாரிக்க, திரு. ஆனந்த் அவர்கள், திரு. இராமர் தனது அண்ணன் என்றும், மலைக்கு சென்று வந்ததில் இப்படி ஆகி விட்டது என்றும் சொல்ல, மருத்துவர் அவரின் உயிருக்கு ஆபத்தாகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கெட்ட வார்த்தையில் திரு. ஆனந்தை சாடி தனது நல்லுணர்வை வெளிப்படுத்தி கொள்கின்றார். மேலும், அந்த மருத்துவர், திரு. ஆனந்திடம், இறந்துவிட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்று அபாய கோப்பில் (Risk File) கையெழுத்து வாங்கிக்கொள்கின்றார். திரு. ஆனந்த் அவர்களும், தனது அண்ணன் என்று கையெழுத்து இட்டு தருகின்றார். சுமார் எட்டு மணியளவில், திரு. இராமர் அவர்களுக்கு இருபக்கமும் செலைன் ஏறிக்கொண்டு இருக்கின்றது. அவருக்கு நினைவு போய் நினைவு திரும்பும் நிலை. இடையில் ஒரு முறை இருபக்கமும் செலைன் ஏறிக்கொண்டு இருக்கும் போதே, “டேய், என்னடா நான் வந்து ஒரு மணி நேரமாச்சு, செலைன கிலைனா போட்டா தாண்டா உடம்பு தெளிவாகும்” என்று கூறியிருக்கின்றார். அந்த அளவிற்கு நினைவு போக்கும் வரவுமாய் இருந்திருக்கின்றது. மேலும், தனது கையில் இருந்த பணம், மோதிரம், கைக்கடிகாரம் என அனைத்து பொருட்களையும் கழுற்றி திரு. ஆனந்திடம் ஒப்படைத்து விடுகின்றார். கூட இருந்தவர்கள் அனைவரும் அறைக்கு சென்று விடுகின்றனர். திரு. ஆனந்த் அவர்களும் அறைக்கு சென்று பச்சை வேட்டியை மாற்றி விட்டு, குழாய் உடுத்தி விட்டு வர சித்தரிடம் உத்தரவு கேட்கின்றார், அதற்கு சித்தர் வேட்டியுடன் இங்கேயே, மருத்துவமனையிலேயே, இருக்குமாறு சொல்லிவிடுகின்றார். மருத்தவமனை உதவியாளர் ஹாஸ்பத்திரியில் இரவு படுக்க கூடாது என்று சொல்ல, சித்தரும், திரு. ஆனந்த் அவர்களும் ஹாஸ்பத்திரிக்கு வெளியில் அமர்கின்றனர். அது மே மாதம் சீசன் நேரம், சாரல் அவர்கள் மேல் விழுந்த வண்ணம் இருக்கின்றது. ஒன்பது, பத்து, பதினொரு மணி, ஆகின்றது, அதற்கு மேல் சாரலில் அமர இயலாமல் மருத்துவமனைக்குள் படுக்க செல்கின்றனர், அதற்குள் மக்கள் அனைவரும் மருத்துவமனையில் படுக்க கூடாது என்பதால் படியோரம் எல்லாம் படுத்துவிடுகின்றனர். அங்கு படுப்பதற்கு இடம் இல்லை. சித்தர் வேறு அறைக்கு போகக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று போக, அப்பொழுது தான் அங்கு வேலையில் இருந்த நர்ஸ் தலை சாய்த்துள்ளார்கள். அமைதியாக இருவரும் உள் செல்கின்றனர். சித்தர், திரு. இராமர் படுத்திருந்த கட்டிலுக்கு கீழ், துண்டை விரித்து படுக்கின்றார். திரு. ஆனந்த் அவர்கள் எதிரில் உள்ள படுக்கையில் படுக்கின்றார். வந்த களைப்பில் உடனே உறங்கியும் விடுகின்றார். காலை ஐந்து மணியளவில் சித்தர், திரு. ஆனந்த் அவர்களை எழுப்பி அறைக்கு அழைத்து செல்கின்றார். அங்கு அறையில், பயணத்திற்கு உடன் வந்தவர்கள் வேலை இருக்கென்று கிளம்பி விடுகின்றார்கள். அதன் பிறகு, திரு. ஆனந்த் அவர்கள் காலை சித்தருக்கு உணவு வாங்கி தருகின்றார். சித்தர், திரு. இராமரை போய் பார்க்குமாறும், அவன் நலமாக இருந்தால் அழைத்து வருமாறு சொல்லி விடுகின்றார். மருத்துவமனையில், பதினொரு மணியளவில், ரெளண்டஸ் பார்க்க வந்த மருத்துவரிடம் திரு. இராமர் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து உடம்பு சரியான பிறகு தான் செல்வேன் என்று சொல்லியிருக்கின்றார். அதற்கு மாறாக, திரு. ஆனந்த் அவர்களோ பன்னிரெண்டு மணியளவு சென்று, உடல் நலம் பார்த்து விட்டு உடனே கிளம்பலாம் என்று சொல்லி விடுகின்றார். திரு. ஆனந்த் அவர்கள் அழைத்ததும், மறு பேச்சு இல்லாமல், திரு. இராமர் அவர்களும் கிளம்பி விடுகின்றார். முதல் நாள் இரவு இருந்தது போல இல்லாமல், திரு, இராமர் அவர்கள் “புனர் ஜென்மம்” எடுத்தாற் போல தெளிவாக இருந்திருக்கின்றார். இருவரும் சென்று மருத்துவரிடம் நிற்க, அவர் அக்கறையில் நேற்று தான் வந்திருக்கின்றார், எதுவும் சாப்பிடக் கூடாது, பச்சை தண்ணிக் கூட வாய் வைக்க கூடாது, எப்படி அழைத்து செல்வீர்கள் என்று சாடி இருக்கின்றார். அவருக்கு அதற்கும் சம்மந்தமில்லை என்று அபாய கோப்பில் (Risk File) கையெழுத்து இட்டு தருமாறும் மருத்துவர் கூறியுள்ளார். இதனை திரு. ஆனந்த் சித்தரிடம் அலைபேசியின் மூலம் தெரிவிக்க, சித்தரும், “நீ போடுறா கையெழுத்தை..” என்று உத்தரவிட, திரு. ஆனந்த் அவர்களும் கையெழுத்திட்டு திரு. இராமர் அவர்களை அழைத்து வருகின்றார். மருத்துவரின் உத்தரவு படி, மதுரை செல்லும் வரை, திரு. இராமர் அவர்கள் பச்சை தண்ணியை தவிர வேறெதுவும் குடிக்கக்கூடாது. அதற்கு ஏற்றாற் போல் திரு. இராமரை, அறைக்கு அழைத்து வந்து, இரண்டு ஒரு லிட்டர் பிஸ்லெரி வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்திருக்கின்றார். சித்தர் அவரே அழைத்து சென்று திரு, இராமர் அவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதாக சொல்லி இருக்கின்றார். அதற்கு திரு. ஆனந்த் இருவரையும் தனியாக அனுப்ப மனசில்லாமல், அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு உடன் சென்றிருக்கின்றார். சொன்னபடி, மதுரை செல்லும் வரை, திரு. இராமர் அவர்களும் சித்தரிடம் இருந்து வாங்கிய நீரை தவிர வேறெதுவும் அருந்தாமல் உடன் வந்திருக்கின்றார். மதுரை பேருந்து நிலையம் இறங்கியவுடன், அவரை உசிலம்பட்டி கொண்டு போய் விட்டுவிடுவதாக சித்தர் சொன்னவுடன், திரு. இராமர், தான் நன்றாக இருப்பதாகவும், தானே சென்று விடுவதுமாக சொல்லி, டீ குடித்துவிட்டு கிளம்புவோம் என்று சொல்லி இருக்கின்றார். இரவு இறக்கும் தருவாயிற்கு சென்று, அடுத்த நாள் மதியம் உடல் நிலை சரியாகி விடுவதை அதிசயம் என்று சொல்லாமல் என்ன சொல்வது? அங்கு டீ, வடை உண்ட பின், திரு. இராமரிடம் பெற்ற பொருட்களை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டு, அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். இந்த நிகழ்வை, திரு. இராமர் அவர்கள் குறிப்பில் எண் 20வுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்.
  8. அவரது முதல் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருந்த தருணம், சித்தரிடம் பேச, அவரும் அலுவலகத்தில் இருந்து இரண்டு நாள் முன்னதே விடுமுறை பெற்று விட்டு வருமாறு சொல்லி விடுகின்றார். அதற்கு ஏற்ப திரு. ஆனந்த் அவர்களும் நான்கு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு வருகின்றார். சித்தரிடம் செய்தி கேட்க வலி வந்தால் மருத்துவமனையில் போய் சேரு என்று கூறுகின்றார். இரவு பதினொரு மணிக்கு வயிறு வலி ஏற்பட, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அதனை சித்தரிடம் சொல்ல அவரும் விடியற்காலை மூன்று மணிக்கு குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லுகின்றார். சரி என்று திரு. ஆனந்த அவரும் அங்கு காத்திருக்கின்றார். காலை நான்கு மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை என்பதால் சித்தரிடம் செய்தி சொல்லுகின்றார், அவரும் இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்திருக்க சொல்லுகின்றார், எட்டு மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை, சித்தரும் அடுத்து அடுத்து இரண்டு, இரண்டரை, மணி நேரம் கால அவகாசம் கொடுத்து வருகின்றார். ஒரு பொழுதில் திரு. ஆனந்த் அவர்கள் சித்தரிடம் ஏன் என்று வினவ, அவர் தான் அதனுடன் பேச முயற்சி செய்வதாகவும் அது உடன்படவில்லை என்றும் சொல்லி, கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றார். பொழுதும் சாய்ந்து விடுகின்றது. எட்டு மணி அளவில் மாமனார் தன்னை வீட்டுக்கு அழைக்க, சித்தரிடம் உத்தரவு கேட்கின்றார், அதற்கு சித்தர், சில கெட்ட வார்த்தைகளால் திரு. ஆனந்த் அவர்களை வெகுவாக சாடி, அங்கிருந்து கிளம்பக் கூடாது என்று உத்தரவு தந்து விடுகின்றார். திரும்பவும் பதினொரு மணி வரை கால அவகாசமும் தருகின்றார். அக்கணம், அவரிடம் எட்டரை மணிக்கு வாங்கி வைத்த ஒரு பேக்கட் சிகரெட் மட்டும் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை. பதினொரு மணியும் ஆகிவிட்டது. நள்ளிரவு ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று சித்தரை அழைக்க, அவர், “அடப் போடா அது வரட்டுன்டா வரப்ப, அத தூக்கி விட்டு தள்ளுடா, நான் மல்லுக்கட்டுறேன் போக மாட்டுங்கறா..விடுறா பாத்துக்கலாம், அவ வரப்ப வரட்டும், வேலைய பாரு…” என்று சொல்லி விடுகின்றார். சரி வேறெங்கும் போக கூடாது என்று சொல்லிவிட்டதால், அங்கே ஆற்று மனல் மேல் அமருகின்றார், அவருடன் நான்கு ஐந்து பேர் அங்கு அமர்ந்து சிகெரட் பிடித்து கொண்டு இருந்திருக்கின்றனர். இந்நிலையில், அவர் ஒரு சிகெரட்டை எடுத்து பத்த வைக்கின்றார். ஒரு இழுப்பு இழுக்கின்றார், பின் மிக கடுமையான, வாய் பிளக்க கொட்டாவி விடுகின்றார், அதற்கு பிறகு, ‘பொளிச்’ என்று எச்சிலை உமிழ்ந்திருக்கின்றார். அதற்குள் பாதி சிகெரட் காலியாகி இருக்கும். அது முடிந்து, அடுத்த சிகெர்ட பத்த வைக்கின்றார், இப்படியே இது தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். இந்த இரண்டு மணி நேரத்தில், அவர் நினைவில் அய்யா அவர்களது வீட்டு வாசலில் படுத்து இருப்பது போலவும் தான் அவரின் வயிற்றை சுற்றி சுற்றி தலையால் முட்டி வருவதாகவும் எண்ண அலைகளில் கலந்திருக்கின்றார். அந்த நினைவில் கலந்தவாறே கொட்டாவி விடுவதும், எச்சில் உமிழ்வதும், சிகெரட் இழுப்பதும், என நேரம் கழிந்து இருக்கின்றது. திருமப் சுய நினைவுக்கு வரும் போது மணி இரண்டரை இருக்கும். சிகெரட்டும் காலியாகி விட்டது. அந்த இரண்டு மணி நேரத்திற்கு முன் வரை, அங்கு அவருடன் பேசிக் கொண்டிருந்த யாரும் அங்கில்லை, சுற்றிப்பார்த்தால் எங்கும் எச்சில் துப்பப்பட்டு, சிகெரட் துண்டுகளாய் கிடந்திருக்கின்றன. மூன்று மணி அளவில் டாக்டர் டீ வாங்கி தருகின்றார். மூன்றரை மணி அளவில் குழந்தை பிறந்து விடுகின்றது. அந்த விஷயம் தெரிந்தவுடன் சித்தரை அழைத்து விஷயத்தை சொல்ல முயல்கின்றார், அது வரை அலைபேசியை நள்ளிரவிலும் எடுத்த சித்தர் அதற்கு பிறகு சுமார் இரண்டு மணி நேரம் அலைபேசியை எடுக்கவில்லை, இவரும் எவ்வளவோ முயற்சி செய்திருக்கின்றார். அவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கு முதல் செய்தி சொல்லவும் மனம் வராமல் சித்தரின் அலைபேசிக்கே தொடர்ந்து முயற்சி செய்திருக்கின்றார், கடைசியாக ஐந்தரை மணியளவில், திரு. கோவிந்தராஜன் அவர்களின்* (சித்தர் அய்யா பிள்ளை உயிருக்கான பெயர்) மகள் அலைபேசியை எடுக்கின்றார். அவர்களிடம் வினவ, அவர் ஆழ்ந்து தூங்குவதாக சொல்லுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற விஷயத்தை சித்தருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றார். ஆறேமுக்கால் பக்கம் சித்தரே, திரு. ஆனந்தை அழைத்து குழந்தை பிறந்து விட்டதா என்று வினவி இருக்கின்றார். திரு. ஆனந்த் அவர்களும் நடந்ததையும் தான் அழைத்ததையும் தெரிவித்துக் கொள்கின்றார். அவர் “என்ன குழந்தை” என கேட்க, திரு. ஆனந்த் அவர்கள் என்ன குழந்தை என்று தெரியாது என கூற, சித்தர் கடுமையான வார்த்தைகளில் ஏசியிருக்கின்றார், அவரும் உடனே கையுடன், அலைபேசியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்று பார்த்துவிட்டு, “பெண் குழந்தை” என்று சொல்லுகின்றார். பிறகு திருமதி. ஆனந்திடம் அலைபேசியை தருமாறு சொல்லி அவருடன் சிறிது நேரம் பேசுகின்றார். சில விஷயங்களை தெரிந்து கொள்கின்றார்.
  9. மருத்துவமனையில் குழந்தைக்கு என்ன பேர் என்று வினவ, திரு. ஆனந்த் அவர்கள் உடனே சித்தரை தொடர்பு கொள்கின்றார். சரியாக அவர் அலைபேசியில் அழைப்பு வந்த நேரம், அவரது தலை மேல், வெட்டவெளியில், வெய்யிலில், சில நீர் துளிகள் விழுகின்றன. சித்தர் அந்த பெண் குழந்தைக்கு, ‘சுபிக்ஷா’ என்று பெயர் வைக்கின்றார்.
  10. 2004ல் அவரது தந்தைக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றார். அவரது தந்தை வேலை முடித்து விட்டு மதியம் வருகின்றார். உடல் நிலை சரியில்லை எனினும் மருத்துவரை சந்திக்க மறுக்கின்றார். திரு. ஆனந்த் அவர்கள், தந்தையின் உடல் நிலையை அறிந்து கொள்ள சுமார் மூன்று மணியளவில், குளித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து தன் மனதை அவர் மேல் ஒருமுகப்படுத்தி இருக்கின்றார். அவரது இடது பக்கம் செயலிழப்பதையும், வாய் கோணிக் கொண்டு செல்வதையும், திரு. ஆனந்த் அவர்கள் தனது உடம்பின் மேல் உணர்கின்றார். உடனே சித்தரிடம் அழைத்து தெரிவிக்கின்றார். சித்தரும் உடனே அவரது தந்தையின் வலது பக்க மூளைக்கு செல்லும் நரம்பில் இரத்தக் கட்டு ஏற்பட்டு இருக்கின்றது, இதனால் உயிருக்கு ஏதும் பாதிப்பில்லை எனினும், எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தஞ்சாவூரில் டாக்டர் வாஞ்சியலிங்த்திடம் அழைத்து செல்கின்றாயோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகி விடும், செலவும் மிச்சம் என்று கூறியிருக்கின்றார். இதனை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அதெல்லாம் வேண்டாம் நாம் எப்பொழுது பார்க்கின்ற மருத்துவரை பார்த்தால் போதும் என்று சொல்லி விடுகின்றனர். அதேபோல் அங்கு சென்று சேர்த்துகின்றனர். அந்த டாக்டர் சர்க்கரை அதிகமாக ஒரு காப்பி வாங்கி தர சொல்லுகின்றார். டாக்டரும் சோதித்து பார்த்து விட்டு அங்கேயே அனுமதிக்க சொல்லி விடுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் சித்தர் சொன்னதை தனிப்பட்ட விதமாக டாக்டரிடம் சொல்லி, உடனடியாக இரத்த கட்டை விரிவுப்படுத்துமாறு விண்ணப்பிக்கின்றார். இதனை கேட்ட டாக்டர் இது யார் உங்களிடம் சொன்னது என்று கேட்க, திரு. ஆனந்த் அவர்கள், தனது குரு நாதர் சொன்னதாக தெரிவித்திருக்கின்றார், டாக்டர் கோபத்தில் தான் ஒரு டாக்டர் என்றும் சாமியார் சொன்னபடியெல்லாம் வைத்தியம் செய்ய இயலாது என்றும் தான் அறிந்தவற்றை வைத்தே வைத்தியம் செய்ய இயலும் என்றும் கூறி விடுகின்றார். இரவு அங்கே தங்க சொல்லுகின்றார். பிறகு எட்டு மாத்திரை வாங்கி வருமாறு மருந்து சீட்டு தருகின்றார். அதில் 4 மாத்திரை கிடைத்தது, 4 மாத்திரை கிடைக்கவில்லை. காரைக்கால், நாகப்பட்டினம் எங்கும் தேடி கிடைக்கவில்லை, உடனடியாக, ஒன்பதரை மணியளவில் டாக்டரிடம் கை இன்னும் இழுத்து கொண்டு செல்கின்றது, மாத்திரை வேறு கிடைக்கவில்லை என்று சொல்லுகின்றார். டாக்டர் அதற்கு பிரச்சனையில்லை நீங்க ஓய்வு எடுங்க, காலையில் வந்து பார்க்கலாம் என்று சொல்லி இருக்கின்றார். இவ்வளவு சொல்லியும் மெனக்கெடவில்லை என்ற நிலையில், திரு. ஆனந்த் கோபத்தில் அவரை சாடி விட்டு, உடனடியாக அவர் தந்தையை அங்கிருந்து விடுவித்து அழைத்து செல்கின்றார். கையில் ஏதும் பணமில்லாத தருணம். மழை தூரிக் கொண்டு இருக்கின்றது. நண்பர் ஒருவரின் ஒரு காரை கேட்டு பெறுகின்றார், அந்த நண்பர் அப்பொழுது தான் ஒரு ஓட்டுனரை போட்டு வண்டியை எடுத்து வந்திருக்கின்றார், மருத்துவமனையில் நிற்க வைத்துவிட்டு, இதற்கு மேல் என்னால் ஓட்ட இயலாது, திரும்ப தஞ்சாவூர் செல்ல இயலாது, என்று அந்த ஓட்டுனர், வர மறுத்து கிளம்பி விடுகின்றார். திரு. ஆனந்த அவர்களும், பேருந்தில் நடத்துனராக, ஏதோ அரைகுறையாக வண்டி ஓட்ட தெரிந்த நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு, இன்னும் ஒரு நண்பரிடம் பணம் பெற்றுக்கொண்டு, தஞ்சாவூர் புறப்படுகின்றார். சுமார் நான்கு, நான்கரை மணியளவில், தஞ்சாவூர் புது பேருந்து நிலையம் வந்தடைகின்றனர். அங்கு டீக்கடையில் விசாரிக்க எதிரில் இருக்கும் மருத்துவமனை காட்டுகின்றார்கள். உடனே மருத்துவமனையில் சேர்க்க, இரண்டு மணி நேரம் கழித்து, சுமார் 7 மணியளவில், அவருக்கு உணவு ஏதாவது வாங்கி கொடுங்கள் என்று டாக்டர் சொல்லுகின்றார். அந்த இரண்டு மணி நேரத்தில், திரு. ஆனந்த் அவர்களின் தந்தையும் நல்ல குணமடைந்து நினைவு திரும்ப பெற்று விடுகின்றார். சித்தரிடம் தன் தந்தைக்கு உடல் சரியாகி விட்டது என்று சொல்லி, இந்த மாதிரி நீங்க சொன்ன டாக்டரிம் தான் காட்டினோம் என்று சொல்லியிருக்கின்றார் அக்கணமே சித்தர் தான் ஏதும் சொல்லவில்லை என்று மறுத்து விடுகின்றார். இதே நிகழ்வை, திரு. ராஜா அவர்களின் குறிப்பில், பதிவு எண் 3ல் பார்க்கலாம்.
  11. ஒரு பெளர்ணமி வழிப்பாடின் போது சகோதரர்கள் இருவர் வருகின்றனர். அதில் ஒருவருக்கு ஆவி பிடித்திருக்கின்றது. சித்தர் மேலே விபூதி போட்டவுடன் அவர் குப்புற படுத்துக் கொள்கின்றார். இரவு இரண்டு மணி வரைக்கும் அப்படியே படுத்திருந்தவர், பிறகு திண்ணையை சுற்றி வருகின்றார். யாருடனும் பேசவில்லை. மறு நாள் பதினொரு, பன்னிரெண்டு மணியாகி விடுகின்றது!. சித்தர் அழைத்து பேசுகின்றார். பிடித்திருந்த ஆவி தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. தான் ஒரு சாராய வியாபாரி என்றும், தன்னை கொன்றவர்களை பழிவாங்கி விட்டு விலகிக்கொள்வேன் என்று சொல்ல, சித்தரும் இந்த கூட்டினுள் உள்ள ஆன்மா அதனால் பாதிக்கப்படும், நீ செய்த காரியத்திற்காக அது சிறைச்சொல்லக் கூடும். அது தவறு, என்று சொல்லி பிடித்திருந்த ஆன்மாவை விலக சொல்கின்றார். அந்த சாராய வியாபாரியின் ஆன்மாவும், அழைத்து வந்தவர்களிடமே நீ எனக்கு பத்தாயிரம் பணம் தர வேண்டியது பாக்கி இருக்கின்றது என்றும் பேசியுள்ளது. அது அப்படி பேசிக் கொண்டு இருக்க, சித்தரும் அதனுடன் பேசி அனுப்ப முயற்சி செய்கின்றார். திரு. ஆனந்த் அறிந்த வரை சித்தர் அய்யா பிள்ளை ஆவி விரட்டியதில் இது வரை யாரையும் அடித்ததில்லை என்றும் அதிக பட்சம் ஒரு எலுமிச்சம் கனி தருவார் என்று பதிவு செய்துள்ளார். இப்படியே சுமூகமாக பேசியபடி, பிடித்திருந்த சாராய வியாபாரி ஆன்மாவை சாந்தப்படுத்தி வழியனுப்பி வைத்திருக்கின்றார்.
  12. 2003-4ம் வருடம் சித்தருடன், பத்து—பன்னிரெண்டு பேர், வத்திராயிருப்பு வழியாக சதுரகிரி பயணம் செல்கின்றனர். கோரக்கர் குண்டாவில் அனைவரும் நீராடிவிட்டு, சந்தன மகாலிங்கம் செல்கின்றனர். அங்கு பன்னிரெண்டு மணியளவில் அபிஷேகம் நடக்கின்றது. சுவாமி சன்னிதியிலிருந்து மூன்றரை அடி தூரத்திலிருந்து, திரு. ஆனந்த் அவர்கள் அமர்ந்திருக்கின்றார். அங்கு சந்தன மகாலிங்கதிற்கு அபிஷேகம் நடக்க நடக்க இங்கு திரு. ஆனந்த் அவர்களுக்கு உடல் குளிர்ந்து, தூக்கிப்போட்டு நடுங்க ஆரம்பித்து விடுகின்றது. அவரால் அபிஷேகமும் பார்க்க இயலவில்லை,உடல் நிலையும் மாறி, உருள ஆரம்பித்து விடுகின்றார். இதனை கவனித்த சித்தர், சம்மணம் போட்ட படியே, தனது வலது காலை லேசாக தூக்கி விரித்து, திரு. ஆனந்த் அவர்களின் இடது கால் மேல் வைத்து லேசாக அமுத்துகின்றார். அதற்கு பிறகு, திரு. ஆனந்த் அவர்களின் நடுக்கம் நின்று விடுகின்றது, ஆனால் நினைவோ தப்பி மெய்மறந்து கிடந்து இருக்கின்றார். மணியடித்து விபூதி கொடுத்த பின்னரே திரு. ஆனந்த் அவர்களுக்கு நினைவு திரும்பி இருக்கின்றது.
  13. அவர்கள் சென்றது அமாவாசை இரவு, அதே சதுரகிரி பயணத்தின் போது நடந்த நிகழ்வு தான், அப்பொழுது சித்தர், “இப்ப பாருடா மேல ஒண்ணு தெரியும்,” என்று சொல்ல, அனைவரும் கவனிக்கின்றனர். திரு. ஆனந்த் அவர்களுக்கு ஐந்து மீட்டர் விட்டத்தில் ஒரு முழு நிலவு, வட்ட ஒளி, தாங்கள் இருக்கு சந்தன மகாலிங்கத்தில் ஆரம்பித்து, சுந்தர மகாலிங்கம் சென்று, தவசி பாறையை அடைவதை காண்கின்றார். அது பார்க்க, பந்து போல், புஷ்ப விமானமாக தெரிந்திருக்கின்றது. அவரும் சித்தரிடம் அது என்னவென்று விசாரிக்க, சித்தரும், “பேசாம பாரு, உனக்கு தெரிஞ்சிருக்கில்ல நீ பாரு, அவ்வளவு தான்.” என்கின்றார்.
  14. இறங்கும் போது சாப்டூர் வழியாக இறங்குகின்றனர். இறங்கி கொண்டிருந்த போது, சுமார் பன்னிரெண்டு மணியளவில் சரியான பசி எடுத்திருக்கின்றது. மலை அடிவாரம் வந்துவிட்டனர். இன்னும் ஐந்து—ஆறு கிலோ மீட்டர் அங்கிருந்து நடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க…சித்தர் இங்கு தோட்டங்கள் இருக்கும், கேப்ப கஞ்சி வைத்திருப்பார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் போய் கஞ்சி உணவை யாசகமாக பெற்று வர சொல்லுகின்றார். அவர்களும், அவ்வாறு செய்ய, இரண்டு மூன்று பானையளவு அனைவருக்கும் போதும் அளவிற்கு, மாங்காய், மாவடு, ஊறுகாய், மிளகாயுடன் உணவு கிடைத்து விடுகின்றது. அது அற்புதமான உணவாக இருந்திருக்கின்றது, திரு. ஆனந்த் அவர்களின் வாக்கின்படி அந்த சாப்பாட்டை உண்ட உணர்வு இன்னும் நெஞ்சுக்குள் இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். அந்த மாதிரி இன்னும் ஒரு முறை கிடைக்குமா என்று வியந்துள்ளார்!
  15. தனது மனைவியின் அக்காவிற்கு திருமணமாகி இரண்டு வருடம் கழித்தும் குழந்தை இல்லை என்று திரு. ஆனந்த், அவர்களின் மனைவி, அவர்களது மனைவியின் அக்கா, மற்றும் அவர்களது அக்காவின் கணவன், என அனைவரும் செல்கின்றனர். சித்தர் திரு. ஆனந்த் அவர்களை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, மீதம் இருந்த மூவருடன் பேசிக் கொண்டு இருக்கின்றார். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும், அந்த குழந்தைக்கான பெயரையும் வைத்து கொடுத்துள்ளார். அவர்களிடம் சபரிமலை யாத்திரா பயணத்திறக்கு பணம் பெற்றுக் கொண்டு, அதிலிருந்து நூறு ரூபாய் எடுத்து, தனது, திரு. கோவிந்தராஜன் அவர்களின் பேரன் ஆதவனுக்கு, துளசி மாலையும், வேட்டியும் எடுத்து வரச் சொல்லுகின்றார்.
  16. அந்த சபரி மலை பயணத்தின் போது ஆதவன் மேல் சார்த்திய சித்தர் தந்த உருத்திராட்ச மாலையும், கடையில் வாங்கிய துளசி மாலையும் இரண்டும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப்பிணைந்து கிடந்தது. இதற்கு இடையில் மாலை போடும் போதே சித்தர் ஒரு நிகழ்வை அனைவருக்கும் காட்டுகின்றார். மாலையை கையில் வைத்துக் கொண்டு பிரணவம் சொல்லும் போது மாலை முன்னும் பின்னும் ஆடுவதை காண்பித்திருக்கின்றார். இப்படி அந்த மாலை, மலை சென்று பின்னி வர, அதனை பொக்கிஷமாக கருதி, பேழையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதனை, தன்னை சந்திக்க வந்த அனைவரிடமும் காட்டுவது, யாத்திரா பயணங்களின் போது, புனிதம் என்பதால், செருப்பு போடாமல், அதனை தானே எடுத்து செல்வது என்று அதனை கண்ணும் கருத்துமாக காத்து வந்திருக்கின்றார். சமாதி அடைந்த பின், அந்த பேழையும், மாலையுடன், சித்தரின் சடலத்தின் கையில் வைத்தவாறு அடக்கம் செய்துவிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  17. 2010, திருமதி. ஆனந்த் அவர்களின் அக்காவிற்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்தும் குழந்தைபேறு இல்லாமல், சித்தர் அய்யா பிள்ளையை காண வருகின்றார்கள். திருமதி. ஆனந்த் மற்றும் அவர்களின் அக்கா இருவருடன் சித்தர் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்பொழுது திருமதி. ஆனந்த் அவர்களது அக்கா, தனக்கு குழந்தை இல்லை என்று தெரிவிக்க, சித்தர் இல்லை நீ மாசமாக தான் இருக்கின்றாய் என்று கூறுகின்றார். அதனை அவர்கள் நம்ப மறுக்க. திருமதி. ஆனந்த் அவர்களை தனது அக்காவின் அடிவயிற்றில் கைவைத்து பார்க்குமாறு சொல்ல, அவர்களும் அப்படியே செய்கின்றார்கள். அக்கணம் அங்கு நெளிவு தெரிந்திருக்கின்றது. கரு உண்டானதையே அப்பொழுது தான் அவர்கள் உணர்கின்றார்கள். சித்தரும் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்றும், அதற்கு இன்ன பெயர் சூட்ட வேண்டும் என்றும் சொல்லி அனுப்பி வைக்கின்றார். சொன்னவாறு, அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  18. அதே நிகழ்வின் போது, திருமதி. ஆனந்த் அவர்களின் அக்கா ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த பின், திருமதி. ஆனந்த் அவர்களும் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று முன்னதாகவே சொல்லுகின்றார். அதுவும் அவ்வாறே நிகழ்கின்றது. ’சிவ சக்தி சிவா’வும் பிறக்கின்றார்.
* இங்கு சித்தர் என குறிப்பிடாமல் திரு. கோவிந்தராஜன் என்று அழைக்க காரணம், சித்தர் அய்யா பிள்ளை என்பது அவரது ஆன்மாவிற்கு கொடுத்த பெயர், அந்த கூட்டினை வைத்தும், அந்த கூட்டின் மூலம் கிடைத்த உறவினை வைத்து சித்தரை உறவுகளின் கட்டுக்குள் காட்ட இயலாது என்பதால். மேலும், அவரது முதல் மனைவி இறந்த போது, தாலியை கணவராய் தான் வாங்காமல் அவரது மூத்த மகனை வாங்கி சொல்லுகின்றார். அதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த சிலர் அதனை எதிர்க்க அவர், “நான் எப்படி வாங்க இயலும்” என்று என்னிடம் ஆதங்கப்பட்டார். இப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்தார். எனவே அவரை பொது விடயங்களில் குறிப்பிடும் போது, சித்தர், அய்யா, குரு, சாமி, என்று மொழிவது வழக்கம், அதுவே குடும்ப விடயங்களில் குறிப்பிடும் போது, ‘அய்யா’ மற்றும் திரு. கோவிந்தராஜன் என்ற அவரது இயற் பெயரை வைத்து குறிப்பிடுவது வழக்கம். எனது ஏடுகள் அனைத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றேன். சித்தர் என்று அழைத்து விட்டால், அந்த உயிரை யாரும் உரிமை கோராலாகாது, அன்று முதல் அது பொது வஸ்துவாகி விடுகின்றது. அப்படி மீறி உரிமை கோரினால் அது சித்தர் என்ற பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விடுகின்றது. இல்லை பொதுவாக ‘அய்யா’ என்று இரு சாராரும் அழைக்கலாம்.

குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Thursday, July 5, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (11): திரு. டேவிட் மீ. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (11): திரு. டேவிட் மீ. அவர்களின் இறை அனுபவங்கள்.

டேவிட். மீ. (David. Mi)
நேர்காணல் விவரம்: 

இடம்: நாகை, திரு. ஆனந்த்/ராஜா அவர்களின் வசிப்பிடம்.
நாள்: வைகாசி 11, 2018 வெள்ளிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. சித்தர் அய்யா பிள்ளை அவர்கனின் சயனத்தில் கிடைத்த உந்துதலின் காரணமாக, சித்தர் காகபுஜண்டர் நாடியை தேடி கொண்டு இருந்த பருவத்தில், அன்பர் ஒருவர் மூலமாக திரு. அருள் செல்வன் டேவிட்டை சந்திக்க நேரிடுகின்றது, திரு. டேவிட் அவர்களும், அக்காலகட்டத்தில் தேடலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல சாமியார்களை அதற்கு முன் சந்தித்து விட்டு இவரை மட்டும் பார்த்து என்னாக போகின்றது என்ற யதார்த்த மனநிலையில், முதல் சந்திப்பு, நாகவிளாகத்தில் நிகழ்கின்றது. அந்த சந்திப்பு நாடி பார்க்க அழைத்து செல்வதற்காக என்றாலும் அந்த முறை அது சாத்தியப்படவில்லை. 
  2. இரண்டாவது முறை, இதே பயணத்தின் பொருட்டு அழைத்து செல்ல முற்படும் போது, சித்தர் அவர்களை, தேவூரில் அன்பர் ஒருவர் வீட்டில் சந்திக்க நேரிடுகின்றது. அப்பொழுது அவர், திரு. டேவிட் அவர்களை என்ன நட்சத்திரம், என்ன ராசி என்று வினவுகின்றார். எப்பொழுதும் தன் ஜாதகத்தை தன் கையில் வைத்து இருந்த திரு டேவிட் அவர்கள், அய்யா ராசி, நட்சத்திரம், கேட்டதும் ஜாதகத்தை எடுத்து நீட்டுகின்றார். சித்தரும் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு, நான் ஒரு பாட்டு பாடுகின்றேன் கேட்கின்றாயா என்று கேட்டுள்ளார்? அதற்கு திரு. டேவிட் அவர்களும் ஆமோதிக்க, சித்தர் சிவபுராணம் பாடுகின்றார். ஆரம்ப காலத்தில், மாரியம்மன் தாலாட்டு, சிவ புராணம் பாடுவது அவரது வழக்கம். சித்தர் சிவ புராணம் பாட பாட உடனிருந்த அன்பருக்கு உடல் ரீதியான ஒரு மாற்றம், அதாவது ‘முதிய தோற்றம்’ ஏற்படுகின்றது. 
  3. சித்தர் சிவபுராணம் பாடிய பின், திரு. டேவிட் அவர்களின் ஏட்டை, எடுத்துக் கொண்டு, தனி ஒரு இடத்தில் போய் படுத்துக் கொள்கின்றார். நிலைமாறிய அன்பர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்றார், அவர் திரு. டேவிட் அவர்களிடம் அவர்கள் வீடு எப்படி இருக்கும், அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் என்ன இருக்கம் என்று செய்தி சொல்லுகின்றார். கோவில், கோவில் பக்கத்தில் குளம், குளத்திற்கு எதிராக முதல் வீடு, பழைய காலத்து இரண்டு முற்றம் உள்ள ஓட்டு வீடு, என்று ஞானத்தில் உணர்ந்த பொருள்தமையினை அந்த அன்பரும் திரு. டேவிட் அவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். அதனை தொடர்ந்து, திருமணம் இல்லை, இந்த வயதில் செல்வ செழிப்பு எல்லாம் கூடும் என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்… இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இங்கு இவர் பேசுவதை, கேட்க முடியாத இடத்தில், வெளியில் சித்தர் அய்யா பிள்ளை இருந்திருக்கின்றார், இருந்தும், இங்கு உள்ளே என்ன சொல்லப்பட்டதோ, அதனையே சித்தர் அய்யா பிள்ளையும் திரு. டேவிட் அவர்கள் ஏட்டில் வயது வாரியாக, எழுதிக் கொடுத்திருக்கின்றார். 2002 இந்த நாள் நேரத்துடன் யார் யார் விவாதித்தது என்று கையெழுத்து இட்டும் தந்துள்ளார்கள். அவர்கள் எழுதி தந்த விஷயங்கள் எல்லாம் இது வரை திரு. டேவிட் அவர்களுக்கு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
  4. அதற்கு பிறகு, திரு. டேவிட் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நாகவிளாகம் சென்று வருவது வழக்கம், அதனால் என்னவோ அவருக்கு எந்த ஏமாற்றமும் இது வரை இருந்ததில்லை. மேலும் அங்கு சென்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல உத்வேகம் கிடைக்கப்பெறுகின்றது என்பது அவரது கூற்று.
  5. 2003ல், ஒரு குழந்தைக்கு புத்தகம் வாங்க சென்னை ஹிக்கின் பாதம்ஸ் செல்கின்றனர், அங்கு தான், ‘சித்தர் பாடல்கள்’ ’குரு யார்’, என்ற புத்தகத்தை எடுத்து தருகின்றனர், சித்தரும் அதனை பெற்றுக்கொண்டு யார் யார் வாங்கி கொடுத்தார்களோ அவர்கள் பெயரை எழுதி தருமாறு கேட்டுக் கொள்கின்றார், அவர்களும் அதன் படி பெயர்களை எழுதி புத்தகத்தை தருகின்றனர். பின்னர், அவருக்கு இதெல்லாம் எனக்கு படிக்க தெரியாது, நாலு நாலு வரியாக படித்து சொல்லுமாறு கேட்டுக்கொள்ள அவர்கள் படித்து சொல்ல இவர் அதனை உள்வாங்கி பாடலாக பாடுவது வழக்கம். இதில் காரில் பயணம் செய்யும் போது நடக்கும், இந்த பரஸ்பரம் திரு. டேவிட் அவர்களுக்கு சித்தருடன் நடந்த சம்பாஷனைகளில் மிகவும் பிடித்தமையில் ஒன்று. அவை அவருக்கு மகிழ்ச்சி கொடுத்த நாழிகைகள். 
  6. அறுவடை முடிந்த சில காலங்களில், இரவு நேரத்தில், சுமார் 7.30—9.00 மணியளவில், வயலில் தார்ப்பாய் போட்டு, வெட்டவெளியில் சத்சங்கம் அரங்கேற்றம் செய்துள்ளனர்—சித்தர் கதை சொல்லுவதும், இந்த நட்சத்திரத்தை பாரு என்பதும், அதைப்பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதும், அதனை பார்க்கும் போது ஒரு வித இனம் புரியாத மகிழ்ச்சி கிடைப்பதுமாக அந்த அரங்கேற்றங்கள் நடந்தேறியுள்ளன. 
  7. அய்யா, திரு. டேவிட், மற்றும் திரு. டேவிட் அவர்களது நண்பர் ஒருவரும், மகாபலிபுரத்தில், திரு. மகாபலிபுரம் ரவி அவர்களது இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு, திரு. மகாபலிபுரம் ரவி அவர்கள், ஜெர்மனிய அன்பர் போலி, என்பவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சித்தரையும் அவருடன் வந்தவர்களையும், அங்கு அழைத்து செல்கின்றார். திரு. போலி அவர்களுக்கு காலில் கட்டியிருந்திருக்கின்றது. அங்கு சென்ற சித்தர், தரையில் அமர்ந்து கொண்டு, காலை நீட்ட சொல்கின்றார். திரு. போலி அவர்களும் காலை நீட்ட சித்தர் அந்த கட்டியை தன் விரலால் தொடுகின்றார். இதனை திரு. டேவிட் பார்க்கும் போது, திரு. போலி அவர்களின் கட்டியிலிருந்து, வெள்ளையாக ஏதோ ஒரு நூல் வெளியாவதை காண்கின்றார், இதனை செய்யும் தருவாயில், இடையில், சித்தரிடம் சொல்ல, உனக்கு தெரிகின்றது அல்லவா, நீயும் வைத்து பார், உன்னால் அதனை உணர முடியும் என்று கூறுகின்றார். அவரும் தொட, அந்த கட்டியிலிருந்து, ஊசி குத்துவதை போல ஏதே ஒன்று வெளியாவதையும், அதன் வலியையும் உணர்கின்றார். மாலை 6.00 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ, அடுத்த நாள், திரு. போலி அவர்களிடம் அவர் உடல் நலத்தைப்பற்றி வினவுகின்றனர். அவரும் வலி குறைந்திருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். இந்த அனுபவமே சித்தர் அய்யா பிள்ளையிடம் சக்தியுள்ளது என்பதை திரு. டேவிடுக்கு உணர்த்த செய்து இருக்கின்றது. மேலும் அவர் அந்த கட்டியிலிருந்து, ‘சுருக்’, ’சுருக்’ என்று குத்திய வலியை உணர்ந்த பின்பு தான், இது உண்மையா, இல்லை மாயையா என்று வினவ ஆரம்பித்திருக்கின்றார், அந்த சம்பவத்தை ஆய்வு செய்திருக்கின்றார், பிறகு அதனை சித்தரிடம் வினவ, சித்தரும் உன் சரீரத்தில் அந்த தன்மையுண்டு என்று மொழிந்திருக்கின்றார்.
  8. ஒரு ஆடி கடை வெள்ளி சமயம், ஹோமம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, அன்பர்கள் கூடி இருக்க, திரு. டேவிட் அவர்கள் ஒரு அய்யத்தை எழுப்புகின்றார்: அருள் நிலையில் ஆட்கொள்ளப்பட்டு நடந்து வரும் போது ஏன் எலுமிச்சம் கனியை பாதத்திற்கு கீழ் வைத்து, அதனை மிதித்து நடந்து வருகின்றீர்—அப்படி வைத்து மிதித்தால் தான் உங்களால் நடக்க இயலுமா? அது உங்களுக்கு மட்டும் தானா? சித்தரும், இந்த கேள்விகளுக்கு பதிலாக அவரையே அதனை அனுபவிக்க சொல்லுகின்றார்: அமர சொல்லுகின்றார். பாடலை கேட்க சொல்கின்றார். பாடிய பிறகு காலை பிரிக்க சொல்லுகின்றார். திரு. டேவிட் அவர்களால் பிரிக்க இயலவில்லை. சரி தூக்குங்கள் என்கின்றார். இரு பக்கமும், இரு அன்பர்கள் தூக்குகின்றார்கள். தூக்கி காலை நிமிர்த்த பார்க்கின்றார்கள். திரு. டேவிட் அவர்களால் நடக்க இயலவில்லை. பிறகு இரண்டு பாதங்களுக்கு கீழும் எலுமிச்சம் கனியை வைக்கின்றார்கள். பிறகே, அவரால் அதனை அழுத்தி, உடைத்து நகர இயலுகின்றது. இதற்கு சித்தர் சொன்ன காரணம் பின் வருமாறு: பூமியில் இருக்கம் சக்தி, அந்நிலையில் தன்னை இழுத்துக்கொள்வதால், அந்த தடையை நீக்க, எலுமிச்சம் கனியை பலியாக வாங்கிக் கொண்டு சந்தோஷமாக முன் தள்ளி விடுகின்றது. காலால் அந்த எலுமிச்சம் பழத்தை அழுத்தி உடைத்தால் ஒழிய அது உன்னை நகர விடாது.
  9. சில சமயம் அவரது உடம்பில் இருந்து பேசுவது அவரா, இல்லை வெளியில் இருந்து இறங்கிய சக்தியா என்பதனை அறிந்து கொள்ள சில சோதனைகளை பலமுறை செய்துள்ளனர். பொதுவாக அவர் பின் ஒரு பக்கம் அமர்ந்திருக்கும் அவர், சித்தர் ஆட்கொண்டு பேசும் போது, கிள்ளி பார்ப்பது, ஊக்கு வைத்து குத்திப்பார்ப்பது என சோதித்தும் உள்ளார். அத்தருணங்களில், அவரது உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டு இருப்பதையும் கண்டு அறிந்து, அவர் மூலம், அந்த கூட்டினுள் இருந்து பேசுவது வெளியே இருந்து இறங்கிய ஒரு அபூர்வமான சக்தி என்று அறிந்து உணர்ந்து இருக்கின்றார்.
  10. அந்த இறங்கும் சக்தி எதிரில் இருப்பவருக்கு ஏற்றாற் போல தான் பதில் சொல்லும் என்றும் மொழிந்திருக்கின்றார். சில சமயம், அது ஏமாற்றும் விதமாகவும் சொல்வதையும் உணர்ந்திருக்கின்றார். மன்னிக்கவும், இந்த வாஞ்சைக்கு, ஒரு ஆசிரியராக என்னால் பதில் செல்ல இயலவில்லை. திரு. டேவிட் கூறுவது போல, முதல் முறை பார்க்கும் போது என்ன விஷயம் பேசுகின்றதோ அது மட்டும் தான் விஷயம், அது மட்டும் தான் நமக்கு என்று கூறுகின்றார். அவருக்கு சொன்னதில், அதிகமாகவே நடந்துள்ளது என்றும், அதில் எதுவும் தவறவில்லை என்றும், அவர் சொன்னதில் இருந்து எதுவும் மாறவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் சொன்னது போல கோவில் கும்பாபிஷேகமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  11. அன்பர் ஒருவர் தன் மனைவியின் உடல் நிலை சரியில்லை என்று வந்தபோது, இனி செலவு செய்ய வேண்டாம், வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று முடிவை முன்னதாகவே சொல்லிவிடுகின்றார். அதற்கு பிறகு, சித்தர் அய்யா பிள்ளையும், இருமுறை பக்கம், அவர்களை சென்று பார்த்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  12. திரு. டேவிட் அவர்கள், திருவீதி உலா செல்லும் போது, கால்கள் பின்னி, மயக்க நிலையடையும் போது, தன்னைத்தானே அதிலிருந்து விடுவித்துக் கொள்வார், இதனால், இதுவரை, மெய்மறந்து ஆடியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  13. தீர்த்தமலையில் உடல் நிலை சரியில்லாத ஒரு அன்பருக்கு வீட்டுக்கு சென்று விட்டு, அதன் பிறகு இன்னும் ஒரு அன்பர் வீட்டில் தங்குகின்றனர். அங்கு, சாமியார் வந்திருக்கின்றார் என்று அனைவரும் விபூதி பூச வருகின்றனர். அப்பொழுது ஒரு அம்மையார் வரும் போது நடுக்கம் ஏற்படுகின்றது, நடுக்கம் வந்தவுடன் விபூதியை கையில் கொடுக்க செல்கின்றார், அது அவர்கள் கையில் வாங்க மறுத்து பூசி விட சொல்கின்றார்கள். அதற்கு சித்தர் அருகில் இருந்த அன்பரக்ளை சப்தம் எழுப்ப சொல்லுகின்றார், அவர்களும் சப்தம் எழுப்புகின்றனர். முட்டிப்போட்டு அமர்ந்த நிலையிலேயே அந்த அம்மையார் ஆட ஆரம்பிக்கின்றார். நீ யார் என்று அய்யா வினவ ஆட்கொண்ட விஷயம் பேசவில்லை, சரியென்று ஒரு எலுமிச்சம் கனியை இரண்டாக பிளந்து வாயினுற் தள்ளுகின்றார், அதன் பிறகு அந்த அம்மையாரை ஆட்கொண்ட சக்தி பேச ஆரம்பிக்கின்றது. ஆட்கொள்ளப்பட்ட பெண்ணுடன் வெகு நாட்களாக இருப்பதாகவும், அந்த பெண்ணை அது மூன்று முறை அழைத்து செல்ல முயற்சித்ததாகவும், அதன் குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கவும், ஒரே குழந்தையாக இருப்பதாலும் விட்டுவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றது. பிறகு அது யார், என்ன என்று வினவ, அது தன்னைப்பற்றியும் சொல்லி இருக்கின்றது. ஒரு நாள் இரவு முழுவதும் அதனை வழியனுப்பி வைக்க பார்த்திருக்கின்றனர். இயலவில்லை. அடுத்த நாள், அந்த ஊர் மக்கள், தங்கள் கிராமத்தில் எருக்கங்குச்சி வைத்து அடிப்பார்கள் என்று சொல்லி எருக்கங்குச்சி எடுத்து வர, அதனை சித்தர் புறம்தள்ளி விட்டு, அடிப்பது எல்லாம் எதுவும் இல்லை, சப்தம் எழுப்பி பார்ப்போம், என்று திரும்பவும் முயற்சி செய்து இருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அந்த கூட்டை பிடித்திருந்த ஆன்மா விடவில்லை. இவர்களும் கிளம்பி விட்டனர். பின் அந்த ஊர் மக்கள் எங்கோ அழைத்து சென்று விலக்கியுள்ளனர் என்ற செய்தி தெரியவந்திருக்கின்றது.
  14. ஒரு முறை, வெளியிடத்தில் ஒரு ஆன்மீகவாதியின் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்திருக்கின்றார், அங்கு ஒரு ருத்திராட்சம் வாங்கி அணிந்து கொண்டு இருக்கின்றார். அதுனுடன் சித்தர் அய்யா பிள்ளையை காண வந்திருக்கின்றார். அவரும் எங்கு இத்தனை நாட்கள் ஆளை காணவில்லை என்று வினவ, அவரும் நடந்ததை சொல்லியிருக்கின்றார். அதற்கு சித்தர், ஒரு தகாத வார்த்தையை சொல்லி, “நாங்க சும்மா, ‘எல்லாம் இருக்குனு’ சொல்லிக்கொடுத்தா ஏத்துக்க மாட்டிங்க காசு கொடுத்து தான் கத்துக்குவிங்க, உனக்கெல்லாம் காசு வாங்கிட்டு தான் கத்து தரனுமுடா”, என்று சொல்லிவிட்டு, “எதுக்கு கழுத்துல மாட்டிருக்க உனக்கு இது தேவையே இல்லாத விஷயமே” என்று சொல்லியிருக்கின்றார். அவரும் “அங்கு வித்தது அதான் வாங்கி மாட்டிருக்கேன்” என்று சொல்லியிருக்கின்றார். பிறகு அதனுடன், ஆற்றில் சென்று குளிக்கும் போது, அந்த ஆற்றோடு அந்த மாலையும் அடித்து சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  15. எயிட்ஸ் நோயால் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு அன்பரை திரு. டேவிட் அவர்கள் அழைத்து வருகின்றார். அவரை கண்கள் மூட சொல்லிவிட்டு சித்தர் ஒரு பாடல் பாடுகின்றார், பாடிய பின், அவரின் வீட்டிலிருந்து யாராவது ஒருவரை அழைத்து வருமாறு கூறுகின்றார். பின்னர் அவருக்கு உணவு அளிக்கின்றனர், அவர் வேண்டாம் என்று சொல்ல, சித்தர் இது உனக்கு உணவல்ல மருந்து என்று சொல்லி உண்ணுமாறு கட்டளையிட்டிருக்கின்றார். அவரும் உணவு அருந்துகின்றார். பிறகு ஒரு நாள், சொன்னது போல, அவர் தாயாருடன் வருகின்றார், சிறிது நேரம் நலம் விசாரித்துவிட்டு, சித்தர் செய்தி சொல்ல ஆரம்பிக்கின்றார், இது உனக்கு வியாதியல்ல, பெண் வழியாக, கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு கோவிலில் செய்திருக்கின்றனர், நீ அங்கு சென்று வந்தால் உனக்கு விலகிவிடும் என்று கூறுகின்றார். அதாவது வெட்டுடையாள் காளி கோவிலுக்கும், அருகில் உள்ள சிங்கமாகாளி கோவிலுக்கும் சென்று வர சொல்லுகின்றார். முதலில் சிங்கமாகாளி கோவிலுக்கு சென்றுவிட்டு, பிறகு வெட்டுடையாள் காளி கோவிலுக்கு செல்லுமாறு உத்தரவிடுகின்றார். வெட்டுடையாள் காளி கோவிலுக்கு சென்று வேறு எதுவும் செய்ய வேண்டாம், யாராவது ஏதேனும் விசாரித்தால், எதுவும் சொல்ல வேண்டாம், குளத்தில் குளித்துவிட்டு, ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, இவ்வாறு சங்கல்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார், “என்னை பிடித்திருக்கின்ற விஷயங்கள் என்னால் இனி மேல் தூக்கி சுமக்க முடியாது, நீ தூர விலகிக்கோ” என்று! அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இரண்டு வருடம் நலமாக இருந்திருக்கின்றார், திரும்பவும் அதேபோல் செய்ய அவர் இறந்து விடுகின்றார்.
  16. சில சமயம் இரவு 2 மணி அளவில் வீட்டு திண்ணையில் படுத்திருக்கும் போது சப்தங்கள் கேட்கும், அதனை உணரவும் வைத்திருக்கின்றார், இப்படி ஒரு முறை இரவு இஸ்லாமிய மந்திரம் ஓதும் சப்தம் சித்தருக்கு கேட்டு இருக்கின்றது, அருகில் படுத்திருந்தவர்களை உங்களுக்கு கேட்கின்றதா என்று கேட்டு இருக்கின்றார், பதிலுக்கு, “எங்குளுக்கு எங்க கேக்குது?” என்பது போல கூறுவார்கள், சித்தர் அவரை தட்டி விட்டு கேட்கின்றதா என்று வினவ அவர்களும் அந்த சப்தத்தை கேட்டு அனுபவித்திருக்கின்றனர்.
  17. சித்தர் குணப்படுத்திய பல நிகழ்வுகளில் திரு. டேவிட் அவர்கள் சான்றாக இருந்திருக்கின்றார், ஒரு சில நிகழ்வுகளில் பங்கேற்றும் இருக்கின்றார்.
  18. தீர்த்தமலை பயணத்தின் போது, அன்பர் ஒருவர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கு, அவரை அடிவாரத்தில் அமர வைத்துவிட்டு மலையேறுகின்றனர். அந்த நபரால் ஏற முடியவில்லையெனினும், எப்படியோ முயற்சி செய்து, அதுவும் உட்கார்ந்து ஏறாமல் நேராக ஏறி வந்ததை நினைவு கூறுகின்றார்.
  19. தாள விருச்சத்தில், மின்னல் மாதிரி ஒளி கீற்று கிடைக்கப்பெற்று இருக்கின்றது.
  20. திரு. டேவிட் அவர்களின் கூற்றின் படி, உடல் பிணியை நீக்குவதில் சித்தர் அய்யா பிள்ளை மிகவும் கைதேர்ந்தவர். அதேபோல் நயந்து ஒருவர் வருகையில் வாக்கு பலித்தமும் சொன்னது சொன்னதுபோல நடந்திருக்கின்றது.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.